கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் கவிதா கல்யாணசுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருகிறது.

Continues below advertisement

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம், தனக்கு சீட் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் செயல்பட்டு வந்தார். அவர் பொதுமக்களிடம் வேஷ்டி, சேலை, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆதரவை பெருக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்சி தலைமையால் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு வேட்புமனு வழங்கப்பட்டதால், டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பலர் அவரது இல்லம் முன்பு திரண்டு, கட்சியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

Continues below advertisement

“மக்கள் செல்வாக்கு மிக்கவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரத்துக்கு சீட் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் அவர் சுயேட்சையாகவே போட்டியிடுவார்” என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தன்னைச் சந்திக்க கூட்டமாக வரும் நிர்வாகிகளிடம் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் கண்ணீர் மல்க தனது வேதனையை பகிர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதிக்கான வேட்பாளரை மாற்ற வேண்டும் எனவும், கட்சி தலைமையிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் மேட்டுப்பாளையம் தொகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது