தேர்தல் தோல்வியும்- இபிஎஸ் திட்டமும்
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய கட்சி என்ற சாதைனையை பெற்ற ஒரே கட்சி அதிமுக, ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் பல பிளவுகளாக அதிமுக பிரிந்தது. இதனால் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா என தனி அணியாக செயல்பட்டனர். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பதவியை பிடித்தார். இதனையடுத்து அவர் தலைமையில் அதிமுக அடுத்தடுத்து எதிர்கொண்ட அனைத்து தேர்தலிலும் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தவெகவிற்கு பல்டி அடித்த அதிமுக எம்எல்ஏக்கள்
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இதனை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார். மீண்டும் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென உறுதியாக கூறினார். இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சந்தித்த படு தோல்வியால் கட்சி மீண்டும் பிளவுபட்டுள்ளது. முக்கிய நிர்வாகிகள் தவெகவிற்கு பல்டி அடித்த நிலையில், அதிமுக தள்ளாடி வருகிறது. எனவே கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களில் முக்கிய தலைவராக இருப்பவர் டிடிவி தினகரன், மீண்டும் அவரை அதிமுகவில் இணைக்கும் பட்சத்தில் அதிமுக மீண்டும் வலுபெறும் என கூறப்பட்டு வருகிறது.குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரிக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் தோல்வி- இபிஎஸ் ஆலோசனை
அந்த வகையில், அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியும் இறங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி நிலவரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் இன்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தஞ்சை மாவட்டத்தில் இருந்து மாற்று கட்சிக்கு சென்றவர்கள் தொடர்பாக கேட்டறிந்தார். மேலும் தஞ்சையில் கட்சியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனையை வழங்கினார். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய தஞ்சை மாவட்ட நிர்வாகிகள், அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். டிடிவியை கட்சியில் இணைப்பதன் மூலம் தஞ்சை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிமுக வலுபெறும் என தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் டிடிவி
இதனை கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் இன்னொரு கட்சியை வழி நடத்தி வருகிறார். பொதுச்செயலாளராகவும் உள்ளார் என பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இருந்த போதும் தினகரன் குறித்து நிர்வாகி பேசும் போது அமைதியாக கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கடந்த காலங்களில் இது போன்ற கூட்டங்களில் டிடிவி பற்றி பேச அனுமதிக்காதவர், டிடிவி பெயரை குறிப்பிட்டாலே டென்ஷன் ஆனவர், இன்று அமைதியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.எனவே இந்த மவுனம் டிடிவியை அதிமுகவில் இணைக்க சம்மதத்திற்கு அறிகுறியா என கேள்வி எழுந்துள்ளது.
