அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் பகுதியில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக புறநகர் மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி வரவேற்றனர். தலைவாசலில் இருந்து சேலம் மாநகர் பகுதி வரை சாலைகளில் இருபுறமும் நின்றிருந்த அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் சேலம் மாநகர் மாவட்ட சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பளித்தனர்.



இதன் தொடர்ச்சியாக, இன்று காலை சேலம் மாநகர் அண்ணா பூங்கா பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுகவில் பொதுச் செயலாளராக முதல்முறையாக சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில் முன்னாள் முதல்வர்களுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். குறிப்பாக அண்ணா பூங்காவிற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக உற்சாகமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரைதப்பட்டை என பல்வேறு கிராமிய கலைகளை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.



இதைதொடர்ந்து சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, "கூட்டணி குறித்து முடிவு செய்வது மத்தியில் உள்ளவர்களே தவிர மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்ற அவர் அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர்" என்றார்.


மேலும் அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தின் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை எனவும் தெரிவித்தார். எம்ஜிஆர் கட்சியை துவங்கும் போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அதேபோல் அதிமுக ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனையை சந்தித்து கொண்டு தான் இருக்கிறது, இறுதியில் வெற்றிகாணும் என அவர் தெரிவித்தார்.