"நமது தொண்டர்களை, நிர்வாகிகள் மதித்து நடக்க வேண்டும்; தொண்டர்களை காக்க வேண்டிய கடமை அமைச்சர்களுக்கும் , மாவட்ட செயலாளர்களுக்கும் உண்டு" என முதலமைச்சர் ஸ்டாலின்  பேசியுள்ளார். 

திமுக செயற்குழு கூட்டம்:

திமுக செயற்குழு கூட்டமானது, இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் , பொதுச் செயலாளர் துரைமுருகன், ஆர். எஸ். பாரதி கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிராக தீர்மானம் மற்றும் அமித்சாவுக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

200 தொகுதி:

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “ 2026 தேர்தலிலும்  திமுக ஆட்சிதான் . 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் . ஆணவத்தில் பேசவில்லை கலைஞரின் படை இருக்கிறது  என்ற நம்பிக்கையில் பேசுகிறேன். நமது தொண்டர்களை, நிர்வாகிகள் மதித்து நடக்க வேண்டும். தொண்டர்களை காக்க வேண்டிய கடமை அமைச்சர்களுக்கும் , மாவட்ட செயலாளர்களுக்கும் உண்டு.

திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் கொள்கை கூட்டணி. எதிர்க்கட்சிகள் வாக்குகளை பிரிக்க தனித்தனியாக வந்தாலும் சரி, சேர்ந்து வந்தாலும் சரி 2026 தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.

Also Read; TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!

எதிர்க்கட்சித் தலைவர் மீது விமர்சனம்:

மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசாமல் , திமுக என்றால் மட்டும் இபிஎஸ் கத்தி பேசுகிறார்.  அம்பேத்கருக்கு எதிராக பேசி அமித்சாவுக்கு எதிராக பழனிசாமி பேசினாரா, பழனிசாமி என்னதான் கதறினாலும், அவருடைய துரோகங்களும் குற்றங்களும் ஞாபகம் வரும்.  காற்றில் கணக்கு போட்டு, கற்பனையில் கோட்டை கட்டுகிறார்

திராவிட மாடல் ஆட்சியில், பார்த்து பார்த்து நலத்திட்டங்களை செயல்படுத்துகிறோம். இந்தியாவில், எந்த மாநிலங்களிலும் செயல்படுத்த  முடியாத திட்டங்களை செயல்படுத்துகிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.