முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் வரும் மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அவரை வாழ்த்த அகில இந்திய தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரவுள்ளனர்.



முதல்வர் மு.க.ஸ்டாலின்


 


பிரம்மாண்ட கூட்டணிக்கான அடித்தளம்


அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான பிரம்மாண்ட கூட்டணியை வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கட்டமைக்க காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளில் அதற்கான அடித்தளம் அமைக்கப்படும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்துவிட்டு, பாஜகவிற்கு எதிராக 3வது அணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் முயற்சித்து வரும் நிலையில், அவர்கள் இருவரோடும் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல நெருக்கமும் நட்பும் இருப்பதால், மு.க.ஸ்டாலின் மூலமாக அவர்களை சமாதானப்படுத்தி காங்கிரஸ் தலைமையில் பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த தின சந்தர்பத்தை வைத்து, அதற்கான வாய்ப்பு உருவாகலாம் என தெரிகிறது. மார்ச் 1ஆம் தேதி மு.க.ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பு


இந்த கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மரியாதைக்குரிய மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா,  சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வருகை தந்து நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தவுள்ளனர்.


இந்த கூட்டத்திலேயே காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்க்கே முன்னிலையில் பாஜகவை எதிர்க்க சின்ன சின்ன மனக்கசப்புகளை மறந்துவிட்டு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்க்க வேண்டும் என்று தனது ஏற்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மமதா, சந்திரசேகர் ராவ் பெயர்கள் வாழ்த்து பட்டியலில் இல்லை


அதே நேரத்தில், காங்கிரஸ் இல்லாமல் தனியாக பிரிந்து 3வது அணி அமைத்தால் அது பாஜகவிற்கு சாதகமாக மாறிவிடும் சூழல் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மமதா, சந்திரசேகர் ராவ் ஆகியோரை சந்தித்த போதெல்லாம் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் மார்ச் 1ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூனா கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜேஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்கு மு.ஸ்டாலினை வாழ்த்தி பேசுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சகோதரர் போன்றவர் என்று குறிப்பிட்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பெயர்காள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை


இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் - திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்கள்  மார்ச் 1-ஆம் நாள், தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். இது திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் கொண்டாட்ட நாளாக அமையப் போகிறது.


 ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்துக்குள் ஈடு இணையற்ற சாதனைகளைச் செய்து இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சர்களில் தலைசிறந்தவராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்பதைப் பார்த்து நித்தமும் நான் வியந்து நிற்கிறேன். இளம்வயதில் துள்ளித் திரிந்து 'முரசொலி' நாளிதழ் பணிகளைச் செய்து வந்தார். கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை தானே உருவாக்கி, அதன் மூலமாக அந்த வட்டாரத்தில் சமூகப் பணிகளை ஆற்றினார். இயல்பிலேயே பிறந்த கலையார்வத்தின் காரணமாக நாடக மேடைகளில் தோன்றி நாடு முழுக்க பரப்புரை நாடகங்களை நடத்தினார். சென்னை மாவட்டக் கழகத்தின் தூணாக வளர்ந்தார். இளைஞரணியை உருவாக்கிய காலத்தில் அதன் ஏற்றமிகு செயலாளராக வளர்ந்தார். துணைபொது செயலாளராக- பொருளாளராக - செயல் தலைவராக உயர்ந்து இன்று கழகத்தின் தன்னிகரில்லா தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.


 நிர்வாகப் பணிகளில், சென்னை மாநகரத்தின் வணக்கத்துக்குரிய மேயராக - சட்டமன்ற உறுப்பினராக - அமைச்சராக - துணை முதலமைச்சராக வளர்ந்து இன்று முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார்.


 ஆட்சிப்பணியாக இருந்தாலும் - கட்சிப்பணியாக இருந்தாலும் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு - இன்றைய உயர்வுகள் அனைத்தையும் பெற்றவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்பதற்கு கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவருமே சாட்சியங்களாக இருக்கிறோம். இந்த உழைப்பைக் கூட நேரகாலம் பார்க்காமல் எல்லாப் பொழுதும் அவர் ஆற்றி வந்த காரணத்தால் தான் அவர் அடைந்த வெற்றிகள் அனைத்தும் யாராலும் தொட முடியாத வெற்றியாக அமைந்திருந்தன.


 தந்தை பெரியாரின் கொள்கை உறுதியையும், பேரறிஞர் அண்ணாவின் நடைமுறை அரவணைப்பையும்,  அண்ணன் தலைவர் கலைஞர் அவர்களின் சலியாத போராட்டக் குணத்தையும், இனமானப் பேராசிரியரின் பொறுமைக் குணத்தையும் ஒருங்கே பெற்று - அவர்கள் நால்வரையும் தன்னுள் அடக்கிச் செயல்படும் ஆற்றலாளரான மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது எழுபதாவது பிறந்தநாளை ஏற்றத்துடனும் எழுச்சியுடனும் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது.


தலைமை கழகத்தின் சார்பில், மார்ச் 1 - மாலை 5.00 மணி அளவில் சென்னைநந்தனம் ஒய்.எம்.சி.மைதானத்தில், திராவிட நாயகன் தலைவர் மு..ஸ்டாலின் அவர்களின் 70-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த விழாவுக்கு தலைமை வகிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார்.


 இந்தியாவில் இருக்கும் முதலமைச்சர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக் கூடிய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்திப் பேசுவதற்காக இந்தியாவே வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் அகில இந்தியத் தலைவர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள்.


 அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மரியாதைக்குரிய மல்லிகார்ஜூன கார்க்கே அவர்களும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா அவர்களும், சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் அவர்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் அவர்களும் வருகை தந்து நம் முதலமைச்சர் அவர்களை வாழ்த்த இருக்கிறார்கள். நமது தலைவர் அவர்கள் ஏற்புரை ஆற்ற இருக்கிறார்கள்.


சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் - மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம் அவர்கள் நன்றியுரை ஆற்றிட, சென்னை மாவட்ட கழக செயலாளர்கள் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமைக் கழகத்தின் சார்பில் மேற்கொள்வார்கள்.


 நம்முடைய தலைவரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போகும் மகத்தான பல்வேறு செயல்களுக்கு தொடக்கமாகவும் அமையப் போகிறது. இந்தியாவின் புதிய விடியலுக்கான பிறந்தநாளாகவும் அமையப் போகிறது.


எழுச்சிமிகு இயக்கத்தின் - ஏற்றமிகு தலைவருக்கு எழுபதாவது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல கழகத்தின் இந்நாள் - முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், அனைத்து அணி நிர்வாகிகள்  மற்றும் கழகத் தோழர்கள் ஆகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் என துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.