ஒரு தமிழருக்கு கிடைக்க இருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவு:
தமிழகத்திலுள்ள இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
’’தமிழகத்தில் இருந்து பலமான தேசியக் குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்ட்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
ஒரு தமிழருக்கு கிடைக்க இருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும்.
இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு
இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும். ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் அண்ணன் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’’.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
அதே பதிவில், முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமைக் கழகம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.