தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அண்ணாமலைக்கு கோவை தொடங்கி தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் ‘அடுத்த ஆறு மாசத்துல மீடியா நம்ம கண்ட்ரோல்’ எனப் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது. 




கட்சி உறுப்பினர்களிடையே அண்ணாமலை பேசியவை பின்வருமாறு, ‘இந்த மீடியா நம்மளைப் பற்றி தவறா செய்தி போடறாங்க? என்ன செய்யலாம் என்பதையெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம். அடுத்த ஆறு மாதத்தில் இங்க இருக்கற அத்தனை மீடியாவையும் நாம கண்ட்ரோல் செய்யலாம். ஏனென்றால் தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் தலைவராக இருந்த முருகன் ஐயா தற்போது தகவல் ஒளிபரப்புத்துறையின் அமைச்சராக இருக்கிறார். இந்த ஊடகங்கள் அவர் கீழ்தான் வரப்போகின்றன. தொடர்ந்து ஒரு தப்பான செய்தியைப் பதிவு செய்ய முடியாது. அதைவைத்து அரசியல் செய்ய முடியாது. உங்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். மூன்று வருடங்கள் கடுமையாக உழைக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் மூன்று வருடத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள 13000 கிராமங்களுக்கும் பாரதிய ஜனதாவினர் செல்ல வேண்டும். நீட், புதிய கல்விக்கொள்கை பற்றிய உண்மைகளை அவர்களிடம் பேச வேண்டும். இதற்காக அடுத்த மூன்று மாதத்தில் புதுவித அரசியலை நாம் கையிலெடுக்கப் போவதை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். கேரளாவில் நமது பாரதிய ஜனதா இளைஞர்கள் அரசை எதிர்த்து எப்படி நிற்கிறார்களோ அதே போல நிற்போம். அனைவரும் கடுமையாக உழைப்போம்’ எனப் பேசியுள்ளார். 


முன்னதாக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த  வரவேற்பில் அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல், ’எல்லோரும் எங்களை சங்கி என்கின்றனர்.... ஆமாம்... அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் பெரிய சங்கி. அந்தப் பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை’ எனக் குறிப்பிட்டார். இந்தக் கருத்துதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. மேலும் தொடர்ந்து பேசிய அவர்,  ’தமிழ்நாட்டில்  பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட  கும்பலிடமிருந்து விடுதலை கிடைக்க  அண்ணாமலை முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதான் விதி. எனவே திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்களை வரவேற்புரை ஆற்ற அழைக்கிறேன் எனப் பேசியது பரபரப்பானது குறிப்பிடத்தக்கது. செந்தில் வேல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த சக கட்சி உறுப்பினர்கள் அவர் அண்ணாமலையைப் பாராட்டுகிறாரா? அல்லது கிண்டல் செய்கிறாரா? எனக் குழப்பமடைந்தனர். இதனையடுத்து பேசிய அண்ணாமலை, பாரதிய ஜனதாதான் உண்மையான கொள்கையுடைய கட்சி என்றும் பாரதிய ஜனதாவுக்கு மட்டும்தான் நாட்டுபற்று உள்ளது எனவும் இத்தனை நாட்களாக பாரதிய ஜனதா கட்சிக்குத் தமிழ்நாடு தேவைப்பட்டது, இனி தமிழ்நாட்டுக்கு பாரதிய ஜனதா தேவைப்படுகிறது எனவும் பேசினார். மேலும், ‘பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஆட்சி நடத்தும் கட்சி திமுக அதனால்தான் நீட் வேண்டாம், புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என கூறுகிறார்கள்.மற்றொரு பக்கம் பிரதமர் அனுப்பும் தடுப்பூசிக்கு திமுகவினர்தான் முதலில் டோக்கன் வாங்குகின்றனர். இதனால் சாதாரண பொதுமக்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதில்லை.  தி.மு.க.வினரின் குடும்பத்துக்குத்தான் தடுப்பூசி செல்கிறது. இதனை மறைக்கவே தடுப்பூசி கிடைக்கவில்லை என்கின்றனர். மற்றவர்கள் குடும்பத்துக்காகக் கட்சி நடத்துகின்றனர் ஆனால் இது உண்மையான தொண்டர்களை உடைய கட்சி’ என்றார்.