2024 -  நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது பணிகளை தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பேச்சுவார்த்தைக் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை குழுக்கள் என்று அமைத்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40-40 இடங்களை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பாக தேர்தல் பணிகளை தற்போது தொடங்கிவிட்டனர். வார்டு, பகுதிவாரியாக பொதுமக்களை சந்தித்து திமுக ஆட்சியில் மக்களுக்கு செய்த திட்டங்களை எடுத்துரைத்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். அதேபோன்று அதிமுகவில் கூட்டனியை பலப்படுத்துவது, புதிய நிர்வாகிகளை தங்களது கட்சியில் இணைப்பது. உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அதேசமயம் விசிக, காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் 2 பெரிய கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு முடிந்ததும், வேட்பாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது.




இதேபோன்று பாஜகவினரும் கூட்டணியை பல படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கட்சி 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் - என் மக்கள் என்ற நடைபயணம் மூலம் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மோடி அவர்கள் ஆட்சியில் செய்த திட்டங்கள், சாதனைகள் என அனைத்தையும் எடுத்துகாட்டி வாக்கு சேகரித்து வருகிறார். அதேசமயம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் ஆட்சி செய்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மக்களை கண்டுக்கொள்ளாமல் அவர்களு தேவையான பணிகள், ஊழல், என்று தமிழ்நாட்டை சீரழித்து விட்டார் என குற்றம்சாட்டி  வருகிறார்.




இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, மோடி ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள், சலுகைகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் இணை பொறுப்பாளராக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொகுதி முழுவதும் பூத் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் தங்களது உடலில் தாமரை சின்னத்தை வரைந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் ஆர்.ஜி.ஆனந்த். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்களை சந்தித்து ஆதரவு கேட்டார். மேலும் திருச்சியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய அலுவலகத்தை பாஜகவினர் திறந்து வைத்தனர். இதுக்குறித்து பாஜக நிர்வாகிகள் கூறியது.. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாஜக, அல்லது கூட்டணி கட்சியினர் என யாராக இருந்தாலும் அனைவரும் முழுமையாக உழைத்து மாபெரும் வெற்றியை பெற்று தருவோம் என்றனர்.