எட்டு தினங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்கள் சோதனைக்கு எதிராக குரல் கொடுத்தார்களா என பாஜக ஹெச். ராஜா கேள்வி  எழுப்பியுள்ளார்.

 

9 ஆண்டுகால சாதனைகளை  விளக்க பொதுக்கூட்டம் 

 


காஞ்சிபுரம் (Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே எஸ் பாபு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா பங்கேற்று கட்சி நிர்வாகிகளிடையே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். 



 

திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை சோதனை 

 

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ள இடங்களில் ஐடி ரெய்டு நடந்தபோது, திமுக மூத்த அமைச்சர்கள் சோதனைக்கு எதிராக ஏதேனும் குரல் கொடுத்தார்களா என கேள்வி எழுப்பினார். வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து,  அது சம்பந்தமாக தான் அமலாக்கத்துறை அதிகாரிகளும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில், சோதனையில் ஈடுபட்டதாக நம்முடைய ஆட்களே எண்ணி வரும் நிலையில், திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றதாக கூறினார்.



 

2016 ஆண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின் உலக மகா கொள்ளைக்காரன், ஊழலுக்கு பெயர் போனவர் செந்தில் பாலாஜி என ஸ்டாலின் பேசியதை தற்போது சுட்டி காட்டிய ஹெச்.ராஜா, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியை சிறையில் அடைப்பேன் என சபதம் கூறியதை தற்போது நாங்கள் நிறைவேற்றியதாக பகிரங்கமாக தெரிவித்தார். சலவைக்கு போட்ட கரை வேட்டியை தற்போது வேண்டாம் தேவைப்படும்போது, பெற்றுக்கொள்கிறேன் என கூறிய திமுகவினர், கருணாநிதி முதல் அனைவரும் கோழைகள் என சாடினார்.