திருவண்ணாமலை (Tiruvannamalai News): கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு பயனாளிகளின் விண்ணப்பப்பதிவு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன் ஆகியோர் திருவண்ணாமலை, மெய்யூர், வாணாபுரம், சதாகுப்பம் ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியார்களுக்கு பேட்டி அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “குடும்பத்தின் பாரம் அறிந்து குடும்பத்தை நடத்துவது பெண்கள்தான். ஆகவே அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்கும் வகையில் இந்த திட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஆண்டுகளில் பயனாளிகளின் எண்ணிக்கை பொறுத்து அதற்குரிய நிதியினை ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் தகுதியான நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வேறு நபர்கள் யாரும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய போவதில்லை.




திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை 7 லட்சத்து 89 ஆயிரத்து 822 பொது விநியோக அட்டைகள் உள்ளது. மாவட்ட முழுவதும் 1627 பொது விநியோக கடைகள் இயங்கி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 991 முகாம்கள் அமைக்கப்பட்டு அதி வாய்ந்த நபர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கண்காணிக்க 221 மண்டல அலுவலர்கள் 70 கண்காணிப்பு அலுவலர்கள், 20 பிரிவுகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று நான் நேரில் ஆய்வு மேற்கொண்டேன்” என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அமைச்சர், “மத்திய பாஜக அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆன்மீகத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை ஆன்மீகத்தையும் திராவிடத்தையும் இணைத்தும் தற்போதைய திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக திமுக ஆட்சியில் ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல கோயில்களில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தி உள்ளோம்.


 




குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. ஆன்மீகத்தை மையப்படுத்தி தமிழகத்தில் பாஜக, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வருகிறது. முன்னாள் மாநில தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்தியும் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. திமுக தான் ஆட்சிக்கு வந்தது. தற்போது அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரையால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 500 ரூபாய் கட்டண தரிசனம் வசூலிப்பது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் கட்டணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது போல் திருவண்ணாமலையிலும் ஏன் செய்யக்கூடாது. இதற்கு உள்நோக்கம் கற்பித்து பேசக்கூடாது” என்று பேசினார்.