தஞ்சாவூர்: 30 ஆண்டு காலம் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக, இருந்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். தமிழக அரசியல் வரலாறு, ஜெயலலிதா என்னும் ஆளுமை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட தெரியாமல், வாய்க்கு வந்ததை அண்ணாமலை பேசி வருகிறார். கடந்த 91-96ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா மீது 49 வழக்குகள் போட்டனர். அதையெல்லாம் அவர் தவிடு பொடியாக்கினார்.


இந்திய அளவில் நடந்த சதியினால் தான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகம் மட்டுமல்ல தென் மாநிலங்களில் பாஜக காலூன்றுவதற்கு, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜெயலலிதா என்பதை மறந்து விட்டு அண்ணாமலை பேசி வருகிறார்.


வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஜெயலலிதாவிடம் அன்பாக பழகினார்கள். மதர் தெரசா போன்றவர்கள் கூட ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டி உள்ளனர். குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டத்திற்காக, மதர் தெரசா வீட்டிற்கு வந்து நேரடியாக ஜெயலலிதாவை பாராட்டி விட்டு சென்றார். அதேபோல ஜெயலலிதா பெண்கள்  முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்கள் வளர்ச்சிக்காகவும், மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காகவும் விவசாயிகளுக்காகவும், 69% இட ஒதுக்கீட்டை பின்தங்கிய மக்களுக்காக பெற்றுத் தந்தவர்.


அவரது 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையின் சாதனையை கண்டு தான், காழ்புணர்ச்சியால் வழக்கு போட்டனர். ஜெயலலிதா மரணம் அடையும்வரை அவரை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக, இருந்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது.


ஏற்கனவே அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணையின் அடுத்த கட்டமாக அவர் வீட்டிற்கு ரெய்டு வந்துள்ளனர். மருத்துவ பொது கலந்தாய்வு அறிவிப்பினை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள், அதே மாநிலத்தில் படிப்பது தான் வசதியாக இருக்கும். எனவே, பழைய நடைமுறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். இதனை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் அது போன்ற திட்டங்களை அனுமதிக்க கூடாது.


அமைச்சர் துரைமுருகன் பொதுப்பணி துறையில் நீண்ட நாள் அனுபவம் உள்ளவர். தமிழக முதல்வர் எந்த காரணத்தைக் கொண்டும், விவசாயிகள் மற்றும் ஜீவாதார பிரச்சனை என்பதால் பின் வாங்காமல், தண்ணீரை கேட்டு பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா என்றால் கூட யார் எனக் கூட கேட்பார்.நான் உருவாக்கியவர் அவர். ஜெயலலிதாவை விட நான் சீனியர் எனக் கூட எடப்பாடி பழனிச்சாமி சொல்லுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.