இந்தியாவில் சிறந்த ஆன்மீக தலங்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். திருவண்ணாமலை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, சமயபுரம் என பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து செல்லும் கோயில்கள் தமிழ்நாட்டில் ஏராளம் ஆகும்.
பக்தர் உயிரிழப்பு:
குறிப்பாக, ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வட இந்தியா, வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில், ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்களில் ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நேற்றைய தினம் திருச்செந்தூர் கோவிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
கொள்ளையடிக்கும் திமுக அரசு:
நேற்று திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , இன்று என்ன கதை வைத்திருக்கிறார்? கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு.
மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.
சேகர்பாபுதான் பொறுப்பு:
குறிப்பாக, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபு தான், இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சமீபகாலமாக புகழ்பெற்ற கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் எளிதாக சாமிதரிசனம் செய்வதற்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.