தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி மறைமுகமாக தெரிவித்த கருத்து அ.தி.மு.க.வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


அரசியல் அறிவு:


“ அரசியல் அறிவு ஏதுமின்றி ஜெயலலிதா பற்றி அண்ணாமலை வெளிப்படுத்திய கருத்து அவரது அறியாமையையும், அனுபவமற்ற தனத்தையும் காட்டுகிறது. 1996ல் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தாலும், அவர்கள் ஏற்படுத்திய கடும் நெருக்கடியையும் தாண்டி பீனிக்ஸ் பறவையை போல எழுந்து வந்தவர் ஜெயலலிதா.


அதன் தொடர்ச்சியாகவே, 1998 நாடாளுமன்ற தேர்தலில் அவர் அமைத்த கூட்டணி தேசிய முக்கியத்துவத்தை பெற்றது. வாஜ்பாயும், அத்வானியும் இந்த கூட்டணி அமைய பெரும் முயற்சி எடுத்தனர். அது தற்போதைய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை.


வரலாறு தெரியுமா?


சென்னை, மெரினா கடற்கரையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தி அதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஜெயலலிதாவின் ஆளுமையை பற்றி பேசியதை உலகமே கேட்டது. தமிழ்நாட்டில் அப்போது பா.ஜ.க.விற்கான வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா மட்டுமே. அதற்காக கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டதோடு, அவர் அமைத்த அந்த கூட்டணி மக்கள் ஆதரவோடு பெரும் வெற்றியை பெற்றுக்காட்டியது. இந்த வரலாற்றை அண்ணாமலை தெரிந்திருப்பாரா?


மக்களுக்கு நல்லது செய்வதையே தன் அடிப்படை குணமாக கொண்டவர் அம்மா. அதனால்தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகள் பலவற்றை தி.மு.க. தொடுத்தது. எத்தனையோ குற்றச்சாட்டுகளையும் பொய் வழக்குகளையும் அவர் மீது எதிர்க்கட்சிகள் வாரி இரைத்தபோதும், தமிழகத்தை ஆளுகிற பொறுப்பு தமிழக மக்களால் அம்மாவிற்கு வழங்கப்பட்டது.


அரசியல் பக்குவம்:


இந்த காலக்கட்டத்திலும் இந்திய அளவில் தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கக்கூடிய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அம்மா என்பதை அண்ணாமலை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஏழைகளை தேடி அரசு, ஏழைகளுக்கான அரசு என்பதை நிலைநாட்டியதோடு, தமிழ்நாட்டிற்கான வளர்ச்சிப்பாதையை உருவாக்கியவர் அவர். அதனால்தான் அவரது ஆட்சி முறையை பல்வேறு மாநில அரசுகள் இன்றும் பின்ப்றுகின்றன.


உலகம் வியந்த திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் அம்மா. அதனால்தான் அன்னை தெரசா உட்பட பன்னாட்டு தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர். இன்றைய பிரதமர் மோடியும் போயஸ் தோட்டத்திற்கு வந்து அம்மாவை சந்தித்து தனது மரியாதையை வெளிப்படுத்தினார். உலக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தவர் அம்மா. இவை எதையும் உணராமல் அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசி வருவது கண்டனத்திற்குரியது.


வாய் கிழிய பேச்சு:


தனது பெரும் அறிவை பயன்படுத்தி ஊழல் தொடர்பாக கருத்தை கூறும் அண்ணாமலை அம்மாவின் மறைவிற்கு பிறகு கடந்த பழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கும், அதில் ஊறித்திளைத்த அமைச்சர்களுக்கும் எதிராக மத்திய அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல முடியுமா?


கடந்த 2 ஆண்டுகாலமாக தி.மு.க. அரசின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் அண்ணாமலை அதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க என்ன செய்தார் என்பதை சொல்ல முடியுமா? சோதனைகள் மட்டும் தீர்வாகாது. ஊழலை ஒழிக்க வாய் கிழிய பேசும் அண்ணாமலை உருப்படியான நடவடிக்கை எடுக்க இனி சிந்திக்க வேண்டும். முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததை பேசும் அண்ணாமலை தேசிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவரா? என்பதை அவரே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.