முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கைதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமை தாங்கினர். 



ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜு செய்தியாளரிடம் கூறுகையில், நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நபரை பிடித்துக் கொடுத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற அந்த நபர், போலீசார் தடுத்தும் கேட்காமல் போலீசாரை மிரட்டும் வகையில் கல் கொண்டு எறிந்து விரட்டி அடித்துள்ளார். அப்படிப்பட்டவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியின் பேரில் தொண்டர்கள் உதவியுடன்  பிடித்து போலீசில் ஒப்படைத்ததற்கு அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து இன்று சிறையில் அடைத்துள்ளனர்.




இந்நேரத்திலும் கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொடுக்கப்பட்ட பழைய புகார்களை தூசி தட்டி எடுத்து மீண்டும் மீண்டும் அவரை வெவ்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கு. முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை பார்க்கும்போது தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பாதுகாக்கும் முயற்சியை அவர் முன்னெடுக்கிறாரா? எண்ணத் தோன்றுகிறது. எனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததுமே அதிமுகவை முடக்கும் நினைப்பில் கேலிக்கூத்தான விஷயங்களை செய்து வருகிறனர்.



இந்த நடவடிக்கைகளின் மூலம் அதிமுகவை முடக்க முடியாது. தற்போது உள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் கழகப் பணிகளை செய்து வருகின்றனர். கட்சி தலைமை முடிவெடுத்தால் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இயங்குவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதை காலம் தான் முடிவு செய்யும். தற்போது இருக்கும் இரட்டை தலைமையால் கட்சிக்குள்ளும், தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பமும் இல்லை. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்ற அவர் இன்றைக்கு உள்ள சூழலில் நாங்கள் தெளிவாக செயல்படுபவதாக தெரிவித்தார்.