அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை என அதிமுக ஐடி விங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “அஇஅதிமுக குறித்தோ, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தோ, அண்ணன் எஸ்.பி. வேலுமணி குறித்தோ பேசுவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை க்கு எந்த அருகதையும் இல்லை.






தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அதிமுக பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக்கொள்ளட்டும்! ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அஇஅதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது.” என பதிவிட்டுள்ளது. 


என்ன பேசினார் அண்ணாமலை..? 


கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தது. 
அப்பொழுது 303 இடங்கள் மோடி பெற்றிருந்தார். அதிமுக ஆளுங்கட்சியாக அப்போது இருந்த போது பாஜக கூட்டணியில் வரலாறு காணாத தோல்வியை அடைந்தோம். 2024 தேர்தலில் கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசி வருகின்றார். இருவரும் ஒன்றாக இருந்தால் 35 வெற்றி பெற்றிருப்போம் என்று வேலுமணி கூறுகிறார். தனியாக இருந்த போது ஒரு சீட்டு கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. மக்கள் மூன்று அணியை பார்த்துவிட்டு வாக்களித்து இருக்கின்றனர். அதிமுக தலைவர்கள், இவ்வளவு நாட்களாக நிர்ப்பந்திக்கப்பட்டு பா.ஜ.கவிற்கு ஆதரவு கொடுத்தோம் என்று சொன்னார்கள்.
இப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பேட்டியை பார்க்கும் பொழுது, அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. 


இந்த கூட்டணி பிரிந்த பின்பு நிர்ப்பந்திக்கப்பட்டு சில சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததாக சொன்னவர்கள், இன்று பிஜேபி உடன் இருந்தால் சீட் கிடைத்து இருக்கும் என சொல்வது எடப்பாடி பழனிச்சாமிக்கும், வேலுமணிக்கும் பிரச்சனையை ஆரம்பித்திருப்பதாக பார்க்கிறேன். 


2019-ல் ஆளுங்கட்சியாக இருந்த பொழுது ஒரு சீட் கூட வாங்க முடியவில்லை. எந்த அர்த்தத்தில் அதிமுக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என தெரியவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைவர்கள் அனைவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதுதான் இந்த தேர்தல் சொல்லும் செய்தி. எஸ்டிபிஐ போன்ற அடிப்படை வாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டால் என்ன ஆகும் என்பதை அதிமுக தலைவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டி இருக்கின்றனர்.


எல்லா தொகுதியிலும் அதிமுக எம்எல்ஏ இருக்கும் இந்த மாவட்டத்தில், மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் டெபாசிட் இழந்து இருக்கின்றனர். கோவையில் இதற்கு முன்பு இப்படி ஏதாவது நடந்திருக்கிறதா ? கோவை மக்கள் அதிமுகவை நிராகரிக்க வருகின்றனர்.அந்த விரக்தியின் உச்சத்தில் எஸ் பி வேலுமணி போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.” என தெரிவித்தார். 


மேலும், அண்ணாமலையை விட ஏற்கனவே கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகள் வாங்கியிருந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு,
”முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருடைய அரசியல் ஞானத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தவறான தகவலை அதிமுக உடைய மூத்த தலைவர் ஊடகங்களிடம் சொல்லக்கூடாது, பத்திரிக்கையாளர்களும் அவர் சொல்வதை அப்படியே கேட்கக் கூடாது என தெரிவித்தார்.