Just In




AIADMK OPS: அதிமுக அலுவலகம் கிளம்புறேன்..பிரசார வண்டியில் ஏறிய ஓபிஎஸ்
தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக பொதுக்குழுவுக்காக சென்னை வானகரத்தில் உறுப்பினர்கள் கூடி வரும் நிலையில் பொதுக்குழு நடக்குமா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கவுள்ளது.அதற்காக தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், காலை 7 மணிக்கே தன்னுடைய இல்லத்தில் இருந்து பிரசார வாகனத்தில் பொதுக்குழு நடக்கும் இடத்துக்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கிடையே தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ் கட்சி தலைமையகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தலைமைக்கழகத்தில் தொண்டர்களை சந்திக்கிறேன் எனத் தெரிவித்தார். அதிமுக தலைமைக்கழகம் பூட்டி இருக்கும் நிலையில் தொண்டர்களுடன் ஓபிஎஸ் அங்கு புறப்பட்டுச் சென்றார்.
அதிமுக அலுவலகம் இரு தரப்பு ஆதரவாளர்களால் போர்க்களமாக காட்சி அளித்தது. சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் முன்பு குவிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும்,ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தனர்

இருதரப்பு ஆதரவாளர்கள் நடுரோட்டில் சண்டையிட்டுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரஸ்பரமாக கற்களை வீசித்தாக்க்கிக் கொண்டனர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கினர். கற்கள் தாக்குதலில் சிலருக்கு ரத்தக்காயமும் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக,
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்துவந்த நிலையில், அக்கட்சியில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் காலியாக விடப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ், மற்றும் ஈபிஎஸ் ஆகியோரிடையே கடும் போட்டி எழுந்தது.
இதனையடுத்து தற்காலிகப் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக, சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23ம் தேதி தொடங்கியது. ஆனால், பொதுக்குழுத் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டு அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அக்கூட்டத்தில், ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவை விட்டே நீக்கப்படலாம் என்றும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்று பரபரப்புத் தகவல்கள் வெளியான நிலையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது.
இதனையடுத்து சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கானது கடந்த 7ம் தேதி மற்றும் 8ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இரண்டு தரப்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று கூறியதோடு, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதிகள் சொல்கின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.