இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலையின் போது திமுக அரசு டிஸ்மிஸ் செய்யபப்பட்டு தமிழகம் ஆளுநர் ஆட்சியின் கீழ் இருந்தபோது ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்றது. அடுத்த நாள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு அடுத்த நாள் சிபிஐக்கு மாற்றப்பட்டது. 1991ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். குற்றம் நடந்து 20 நாட்களில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். ஜனவரி 29 1998ஆம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி உச்சநீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி தீர்ப்பை கொடுத்துள்ளது. இவர்கள் நிரபராதி என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறார்களோ அதனை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்கிறது. 


இவர்கள் குற்றாவாளிகள் என்பதை மறக்க வேண்டாம்


நம் மண்ணில் என்ன நடந்தது என்பதை மறக்க கூடாது; இவர்கள் குற்றவாளிகள் என்பதை எப்போது மறந்துவிடக்கூடாது. உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பை சொல்லி இருக்கிறார்களோ அதனை ஏற்றுக்கொள்கிறோம். ஒரு நாட்டின் உடைய முன்னாள் பாரத பிரதமரை தமிழ் மண்ணிலே கொன்றுள்ளனர். சிபிஐ விசாரணை செய்து ஒவ்வொருவர்  மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து தவறு செய்திருக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்த பின்னர் தான் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


முதலமைச்சரின் நடத்தையில் சந்தேகம் 


ஆனால் நம்முடைய முதலமைச்சர் நேரில் இருந்து நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் ஏதோ நிரபராதிகளை விடுதலை செய்திருக்கிறார்கள் என்பது போல் கொண்டாடுவது, திமுகவின் அமைச்சர்கள் பேசுவதையெல்லாம் பார்க்கும் போது இந்த முதலமைச்சர் அரசியல் அமைப்பின் மீது சத்தியப்பிரமானம் எடுத்துவிட்டு முதலமைச்சராக தமிழகத்திலே பணியை செய்கிறாரா என்ற சந்தேகம் பாமரனுக்கு கூட வருகிறது. நீதிமன்றம் எங்கேயுமே இவர்கள் நிரபராதிகள் என சொல்லவில்லை. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றில் இருந்து நடந்து கொண்டிருக்கும் விதம் நிச்சயமாக சந்தேகம் வருகிறது. அரசியலமைப்பு சட்டம் மீது சத்தியபிரமாணம் எடுத்துவிட்டு அனைத்து மக்களுக்கும் நேர்மையாக சட்டத்தை நிலைநாட்டக்கூடியவராக இவர்கள் இருப்பாரா?


தமிழக மக்களை முட்டாளாக்கும் காங்கிரஸ்


காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு தமிழக மக்களை முட்டாள் ஆக்கிவிடுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பி இருக்கிறது. 1999ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனை சந்தித்து நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரிக்கை விடுத்தார். பிரியங்கா காந்தி மன்னித்துவிட்டேன் என கூறி உள்ளார். இன்றைக்கு உண்மையாகவே ஆளுமையுள்ள காங்கிரஸ் கட்சியாக இருந்தால், திமுக அரசுக்கு கொடுத்து இருக்கும் ஆதரவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். ஒரு மணி நேரம் வாயை கட்டிக்கொண்டு எங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அடுத்த நாள் காலையில் திமுக கொடுக்கும் ராஜ்யசபா சீட்டுக்காக நாங்கள் போய் நிற்போம் என காங்கிரஸ் சொல்வது தமிழக மக்களை முட்டாள் ஆக்கும் செயல். 


ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்களுக்கு நியாயம் இல்லையா?


இதில் ஆச்சர்யமான விஷயம் ராஜீவ்காந்தி இறந்த போது அவருடன் 17 பேர் இறந்துள்ளார்கள். அப்பாவி போலீசார் 8 பேர் இறந்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இக்பால் அவரது பிறந்த நாளிலேயே உயிரிழந்துள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் நியாயம், நீதி இல்லையா?.  பாரதிய ஜனதா கட்சியின் நியாயம், நீதி என்பது இவர்கள் குற்றவாளி என்பதே, தியாகிகள் போல் தமிழ்நாடு முழுவதும் சாதனை செய்தது போல் கொண்டாடப்பட வேண்டியவர்கள் கிடையாது. வரலாற்றில் தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைத்துள்ளது. 


அதிமுகவும் குற்றவாளிகள்தான்


இந்த தீர்ப்பில் எங்கேயுமே மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே உள்ள கூட்டாட்சி தன்மை குறித்து உச்சநீதிமன்றம் கருத்து சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலையாகி இருக்கிறார்கள், அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும்” என்றார். 


தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்...


கேள்வி: அதிமுக அரசு இரண்டு முறை இந்த விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி உள்ளதே, எனவே நீங்கள் கூட்டணியில் இருந்து விலகுவீர்களா? 


பேரறிவாளன் விடுதலையை அதிமுகவினர் கொண்டாடவில்லை, அதிமுகவை பொறுத்தவரை அவர்கள் குற்றவாளிகள்தான், திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து ஒரு நாளாவது சிறையில் இருந்துள்ளாரா? ஒரு ஆண்டு காலம் பரோலை நீட்டித்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.


கேள்வி: பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்ட இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்துமா? 


பேரறிவளனை போலவே மற்ற 6 பேருக்கும்  பொருந்துமா என்றால் அது பொருந்தாது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது.