ஏப்ரல் 16 ஆம் தேதி அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்  நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


அதிமுகவின் பொதுச்செயலாளராக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7 ஆம் தேதி மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவிப்பு வெளியாகி அது ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே தேதியில் செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டு, அதுவும் ஒரு சில காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி நண்பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், “கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுக மேல்முறையீட்டு வழக்கு 


கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்ட நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.  இதனைத் எதிர்த்து உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு  நாடியது. 


ஆனால் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தது. ஆனால் தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்படாமல் இருந்தது. இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அதேசமயம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தனி நீதிபதி குமரேஷ் பாபு  ஓபிஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தார். 


இந்த தீர்ப்பு கிடைத்தவுடன் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தனி நீதிபதி தீர்ப்பால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது.இதன் இறுதி விசாரணை ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.