அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் இடைக்கால முன் ஜாமின் மனு உத்தரவு இன்று (05-07-24) வழங்குவதாக கரூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் ஒத்திவைத்தார் ஏற்கனவே, முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் மனு மீண்டும் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில்   கரூர் நகர காவல் நிலைய போலீசார் 7 நபர்கள் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னையும் குற்றவாளியாக சேர்த்து போலீசார் கைது செய்ய கூடும் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடந்த 20 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வருகிறார்.  இந்த நிலையில் எம்ஆர் விஜயபாஸ்கர் கடந்த 12ம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்தார். 3 முறை மனு ஒத்திவைக்கப்பட்ட  நிலையில், கடந்த 25-ம் தேதி முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 




இந்த நிலையில், 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் தன்னை அடித்து, உதைத்து போலி ஆவணங்கள் பத்திரப் பதிவு செய்து பறித்துக் கொண்டதாகவும் அதை மீட்டுத் தரக்கோரி வாங்கல் நிலையத்தில் பிரகாஷ் என்பவர் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர்கள் மீது சிலர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


 


 




இந்நிலையில், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டி உள்ளதால் தனக்கு  இடைக்கால முன் ஜாமின் வழங்க கோரி  மீண்டும்  கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த இடைக்கால முன் ஜாமீன் மனு கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் இடைக்கால முன்ஜாமீன் மனு தொடர்பாக இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த பின் இன்று உத்தரவிடுவதாக தெரிவித்து இருந்தார்.