உள்ளாட்சி அமைப்புக்களுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து கையெழுத்து போடாததால், அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் – இரட்டை இலை சின்னமும் கிடைக்காது. 


ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்து போட நான் தயார் என்றும், அந்த படிவங்களை தனக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தியும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் மகாலிங்கம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஒபிஎஸ் கடிதம் அனுப்பிய நிலையில், அந்த கடிதத்தை வாங்க எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.


இன்று பிற்பகல் 3 மணிக்குள் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்ட படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்காவிட்டால், அதிமுக உறுப்பினர்கள் சுயேட்சைகளாக போட்டியிடும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள், அதேபோல், அவர்களுக்கு இரட்டை இலை சின்னமும் கிடைக்காது.


எடப்பாடி பழனிசாமி கையெழுத்துபோட மறுத்துள்ள நிலையில், வேறு வழியின்றி அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


முன்னதாக, தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலும் அதேபோல், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரை 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 8 பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.


அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ‘ஏ’ மற்றும் ‘பி’என்ற இரண்டு படிவங்களை தேர்தல் விதிமுறைபடி சமர்பிக்க வேண்டும். அந்த படிவங்களில் கட்சியின் தலைவர் அல்லது அந்த கட்சிகளின் பொதுச்செயலாளர் கையெழுத்து இட வேண்டும் என்பது விதி.


அதிமுகவை பொறுத்தவரை வேட்பு மனு படிவங்களில் ஒபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும் என்ற நிலை இருக்கும் நிலையில், தற்போது அதிமுகவில் ஒபிஎஸ் – ஈபிஎஸ் இரு துருவங்களாக பிரிந்து நிற்பதாலும், பொதுக்குழுவில் இவர்களின் தேர்வுக்கு ஒப்புதல் பெறாத நிலையிலும், அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அறிவித்திருப்பதாலும் வேட்பு மனு படிவத்தில் யார் கையெழுத்து போடுவார்கள் என்ற குழப்பமும் சிக்கலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


அதன் காரணமாகவே நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண