புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் சார்பில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் மாநில கழக நிர்வாகிகள், மாநில பிற அணி நிர்வாகிகள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் தலைமை கழகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது :


துணைநிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் புதுச்சேரி


யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். பிரெஞ்சு நிர்வாகத்த்தின் கீழ் இருந்த புதுச்சேரியை இந்திய அரசுடன் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது இணைத்தார். அப்போது புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருக்கும் என்ற உறுதிமொழியை நேரு அவர்கள்எ அளித்தார். அதனை தொடர்ந்து 1963-ல் யூனியன் பிரதேச சட்டம் அலுவல் விதிகள் அமைக்கப்பட்ட போது புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதேசமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டவிதிகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி புதுச்சேரி நிர்வகத்தின் முழு அதிகாரமும் துணைநிலை ஆளுநர் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது.


மாநில அந்தஸ்து


மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்த போது மாநில வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருந்தது. வெவ்வேறு கட்சிகள் ஆட்சி அமைத்த போது அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்ததால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர், முதலமைச்சருக்கு தொடர்ந்து எதிர்மறையான கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஜனநாயகம் காலில் போட்டு மிதிக்கப்பட்டது. இதையெல்லலாம் மனதில் வைத்துதான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்கின்ற ஒரு முடிவினை 1998-ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அதை வலியுறுத்தி மத்திய அமைச்சரவையில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி கொள்கை முடிவு அறிவித்தார்கள். அதன்பிறகு திமுக கூட்டணியால் ஏற்பட்ட மாற்றத்தால் மாநில அந்தஸ்து கைவிடப்பட்டது.


கருத்து வேறுபாடு


தற்போதைய அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பல பொதுக்குழுவில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முன்மொழிந்தார். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் அமர்ந்தாலும் துணைநிலை ஆளுநருடனான கருத்து வேறுபாட்டால் தேர்தல் கால அறிவிப்புகளை செயல்படுத்தும் போது மாறுபட்ட கருத்துள்ள அரசால் செயல்படுத்த முடியவில்லை. இதனால் அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது.


மாநில அரசின் நிர்வாகம் அரசின் சொந்த வருவாயில் செயல்பட்டு வரும் நிலையில் மாநில அந்தஸ்து வழங்குவது மத்திய அரசின் கடமையாகும். மத்தியில் தேசிய கட்சிகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அந்துஸ்து வழங்க விருப்பமில்லாத சூழல் உள்ளது. புதுச்சேரி மாநில மக்கள் நலன் கருதி மக்காளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழிவகை செய்யவும் மாநில அந்தஸ்து தேவை என்பதை அதிமுக மீண்டும் வலியுறுத்துகிறது.


முழு அடைப்பு போராட்டம்


பல்வேறு அமைப்புகள் மாநில அந்தஸ்து தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்ற 28-ம் தேதி புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இந்த முழு அடைப்புக்கு மாநில அந்தஸ்தை விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அமைப்புகள், பேருந்து உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வர்த்தக நிறுவனத்தினர், வணிகர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த முழு அடைப்பு போராட்டம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் நடைபெறும் என கூறினார்.