அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,


“ முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டாத சூழ்நிலையில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை தண்ணீர் சென்றடையாத நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்தும், கேரள அரசு தன்னிச்சையாக திறந்துவிட்டதா அல்லது தமிழ்நாடு அரசின் இசைவுடன் திறந்துவிட்டதா என்பது குறித்தும், தன்னிச்சையாக திறந்துவிட்டது என்றால் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் ஏன் கலந்துகொண்டார்கள் என்பது குறித்தும் தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பு ஐந்து மாவட்ட விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா? என்பது குறித்தும் பதிலளிக்குமாறு கேட்டதற்கு பதில் வராததையடுத்து, அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.


என்னுடைய கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல், கேரள அரசையும் கண்டிக்காமல், பெயருக்காக முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டுவிட்டு, நான் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடவில்லை என்றும், போராட்டம் மட்டும் அ.தி.மு.க.வால் நடத்தப்படுகிறது என்றும், அதைப்பற்றி பேச அ.தி.மு.க.விற்கு தார்மீக உரிமையில்லை என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்திருப்பது “ பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப் பாக்கிற்கு விலை பத்து பைசா” என்பதுபோல உள்ளது.




முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்ததில்லை என்று அமைச்சர் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பேபி அணை உள்பட அனைத்தையும் ஆய்வு செய்த அனுபவமும் எனக்கு உண்டு. 14 முறை முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு சென்று தண்ணீரைப் பாசனத்திற்காக திறந்துவிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையே முல்லைப் பெரியாறு அணையுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். நான் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ததே இல்லை  என்று அனுபவம் வாய்ந்த அமைச்சர் கூறியிருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது.


முல்லைப் பெரியாறு பிரச்சினை மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் எந்த பிரச்சினை குறித்தும், தமிழக மக்களின் எந்த பிரச்சினை குறித்தும் பேசுவதற்கு அ.தி.மு.க.விற்கு முழு தார்மீக உரிமை உண்டு. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிராக கேரள அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லத்தக்கதல்ல என உச்சநீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு வழக்குத் தொடுத்தது அ.தி.மு.க. அரசு. 2007ம் ஆண்டே வெளியான காவரேி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டு இருக்கலாம். ஆனால், அதை செய்ய தி.மு.க.விற்கு மனம் இல்லை.




முல்லைப் பெரியாறு அணை குறித்து தற்போது கேள்விகள், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையா? அல்லது தமிழ்நாடு அரசின் இசைவுடனா? கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கை என்றால் தமிழக அரசு அதிகாரிகள் அங்கு எப்படி கலந்துகொண்டார்கள்? தமிழக அரசின் ஒப்புதலுடன் இதுகுறித்து விவசாயிகளிடமும், பிற கட்சிகளிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டதா? அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பு கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியதன் அவசியம் என்ன? என்பதுதான்.


இதற்கு தெளிவான பதிலை அளிக்காமல், நதிநீர் உரிமையை நிலைநாட்டிய அ.தி.மு.க. குறைகூறிப் பேசுவது கண்டிக்கத்தக்கது. இதன்மூலம், தமிழ்நாட்டின் உரிமை கேரளாவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகமும் தெளிவாகிறது. விவசாயிகளின் சந்தேகத்தை போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிற நிலையில், அதை தெளிவுபடுத்தாத காரணத்தால் அதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. இனியாவது நடந்தது என்ன? என்பதை தமிழக அரசு விளக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் அதற்குரிய விளைவுகளை தி.மு.க. சந்திக்கும்.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண