தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், தமிழக அரசின் மக்களை நாடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்க கூடியது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு புதியதாக பணியாளர்களை பணி அமர்த்துவதை தவிர்த்துவிட்டு, ஏற்கனவே குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு  பணியாற்றும் பணியாளர்களை பணியமர்த்தி நிரந்தரமாக்க வேண்டும்.  இதனை உரிய காலத்தில் தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

 



 

கொரோனா காலத்தில் தற்காலிக செவிலியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது இவர்கள் குறைந்த ஊதியத்தில், தங்குவதற்கான இடம் உணவு ஆகியவற்றை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போதைய உணவு, தங்குவதற்கான இடம் இல்லாமல் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு தங்குவதற்கு இடம், உணவு ஆகியவற்றை ஏற்படுத்தி தந்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டக் களத்திற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நேரில் சென்று, சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி கோரிக்கையை நிறைவேற்றுவதாக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். தமிழக அரசு மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது. இதில் சுமூக முடிவை எட்ட வேண்டும். வேளாண் துறையில் விவசாயத் தொழிலாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை என்பதையும், ஆறுநூறு ரூபாய் கூலி என்பதை உயர்த்த கொடுக்க ஒன்றிய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளிக்க முடியும்.

 

 

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வருவது. இது உழைக்கும் மக்களை வஞ்சி கக்கூடிய மிகவும் மோசமான செயல். இன்று பெட்ரோல், டீசல் மீது 25 பைசா உயர்த்தி இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் கோயில் நிலங்களில் உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனை அறநிலை துறை ஊழியர்கள் நோட்டீஸ் கொடுத்து நெருக்கடி கொடுக்க கூடிய சூழல் இருக்கிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு, முதல்வர் தலைமையில் இதற்கு குழுவை அமைத்து, விரைவாக சுமுகத் தீர்வு எட்ட வேண்டும். 

 

 

ஒரு நாட்டின் பிரதமர் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான. மக்களின் வரி பணத்திலிருந்து தான், அலுவலகம், வீடு, வாகன போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பிரதமர் பெயரால் குழு அமைக்கப்பட்டு நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது அரசின் கணக்குக்கு வராது, தணிக்கைக்கு உட்பட்டது அல்ல என்று அறிவித்திருப்பது ஒரு தனிப்பட்ட நபர், எப்படி மோசடி செய்வாரோ, அதைவிட மோசமான மோசடியாக இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தப் பணம் இதுவரை பல்லாயிரம் கோடி வந்திருக்கிறது. யாரிடம் இருந்து வருகிறது, எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது. இதுவரையில் மொத்த தொகை எவ்வளவு என்பதும் தெரியாது. இது எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதும் ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஆகவே சேர்ந்து இருக்கின்ற பணம் அனைத்தும் அரசின் கஜானாவில் சேர்க்கப்படவேண்டும். சட்டபூர்வமாக இது தணிக்கை செய்யப்பட வேண்டும். எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு செலவானது, மீதம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து வெளிப்படையாக பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது என தெரிவித்தார்.

 

 

 

தொடர்ந்து ஹெச் ராஜா குறித்த கேள்விக்கு, ஹெச் ராஜா பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். அவர் பெரியார் இருக்கும் போது நான் இருந்திருந்தால், அவரை செருப்பால் அடிப்பேன் என்று பேசியவர், அதைவிட மோசமான வார்த்தை எதுவும் இருக்காது. ஆனால் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுதும் அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார். பத்திரிக்கையாளர்களை சகட்டுமேனிக்கு பேசுகிறார். அரசியல் தலைவர்களை பற்றி பேசுகிறார். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். அத்து மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஹெச்.ராஜா பிரச்சினையில் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இதில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாகவும், காவல்துறை அதிகாரிகளை அவதூராக பேசினார் என்று ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கம் இன்னும் முடிந்தபாடில்லை. ஆகவே நாட்டு நலன் கருதி ஹெச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக தலைவர்கள் கீழிருந்து மேல் இருப்பவர்கள் வரை பொய் தான் பேசுவார்கள். உலகத்தில் யாருமே நினைக்க முடியாத அளவுக்கு பொய் பேசும் தலைவர்கள். அவர்களுக்கு பொய் தான் மூலதனம். பொய் பேசியே தங்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள்,  ஆட்சியைக் காப்பாற்றிக்  கொள்ளலாம் என கருதுகிறார்கள். அது நிச்சயம் எடுபடாது, ஒரு நாளைக்கு அது முடிவுக்கு வரும் என முத்தரசன் தெரிவித்தார்.