புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவானது அடுத்த மாதம் 21, 25, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சிகளுக்கிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் தேசிய ஜனநாயக கூட்டணில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் அங்கம் வகித்து கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்தனர். இந்த நிலையில் அண்மையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பாமகவை என்.ரங்கசாமி அழைக்காததால் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக பாமக அறிவித்துள்ளது. இருப்பினும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க முடிவெடுத்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடங்களை பகிர்ந்து கொள்வதில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கட்சிகளுக்கிடையே கருத்துவேறுபாடுகள் நிலவுவதால் முதலமைச்சர் என்.ரங்கசாமி ராஜ்நிவாஸில் புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது. 


ஆளுநர்-முதல்வர் சந்திப்பு தொடர்பாக ஆளுங்கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடானது நடந்து முடிந்த  சட்டப் பேரவைத் தேர்தலை போன்றே இருக்க வேண்டும் என முதலமைச்சர் என்.ரங்கசாமி விரும்புகிறார். இதன்படி மொத்தமுள்ள உள்ளாட்சி இடங்களில் 60% இடங்களை முதலமைச்சர் என்.ரங்கசாமி கேட்கிறார். இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகளில் 3 நகராட்சிகள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு செல்லும் பட்சத்தில் மீதமுள்ள இரு நகராட்சிகளை பாஜகவும், அதிமுகவும் பிரித்துக் கொள்ள வேண்டும் என என்.ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். ஆனால் புதுச்சேரி நகராட்சியில் போட்டியிட அதிமுகவும், பாஜகவும் விரும்புவதால் நகராட்சிகளுக்கான இடப்பங்கீடு முடியவில்லை. 




புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: ’கூட்டணிக்கு என்.ரங்கசாமி அழைக்காததால் பாமக தனித்துப்போட்டி’


மாநிலம் முழுவதும் மொத்தம் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் 5 இடங்களில் என்.ஆர். காங்கிரஸும் மற்ற 5 இடங்களை பாஜக, அதிமுக கட்சிகளும் பிரித்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். கொம்யூன் பஞ்சாயத்துகளில் போட்டியிடும் கட்சிக்கு ஏற்ப 60% கவுன்சிலர் பதவிகளையும் போட்டியிடும் கட்சிகளுக்கே ஒதுக்குவது என்றும், மீதமுள்ள 40% இடங்களை மற்ற கட்சிகள் தலா 20% ஆக பிரித்து கொள்ள வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவை ஏற்பதில் கூட்டணி கட்சிகள் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இடப்பங்கீட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படாதது குறித்து புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் பாஜக மேலிடத்திற்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் ராஜ்நிவாசில் முதல்வர் என்.ரங்கசாமி, பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது காரிஅக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் நாளைய தினமே நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் இடப்பங்கீடு இறுதியாக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி தேர்தல்- 24 மணி நேரத்தில் 2 முறை ஆளுநரை சந்தித்த என்.ரங்கசாமி