தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.18 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணியினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி எம்பி செந்தில்குமார், தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்டம் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரயில் திட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தென்மேற்கு ரயில்வேவிடம் இருந்து கடிதம் வரப்பட்டுள்ளது. மேலும் நில அளவைப் பணி பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும். நில அளவைப் பணி முடிந்த பிறகு தருமபுரி நகரப் பகுதியில் வரும் எட்டு கிலோமீட்டர் பாதைக்கு புதிய பாதைக்கு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கவுள்ளது. ஏற்கனவே சென்ற நிதி ஆண்டில் மொரப்பூர் தருமபுரியில் திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளிடம் நேரில் சந்தித்து வலியுறுத்திய பின்பு தற்போது நில அளவைப் பணி மற்ற பணிகளுக்காக சுமார் ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

தருமபுரி நகராட்சி பகுதிக்கு முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்த பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சியில்  அரசியல் காரணத்திற்காக, முன்னாள் அமைச்சர் அன்பழகன்  நிறுத்தி, அவர் தொகுதிக்கு எடுத்து சென்றார். இதனால் தருமபுரி நகராட்சி பணம் கட்டி பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டது.  தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மிக முக்கிய கோரிக்கையான நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீண்டும் பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தில் இருந்து, தருமபுரி நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர் திட்டங்களை தனி கவனம் செலுத்தி தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெண்கள் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர். இதில் பணம் கொடுத்தபோது, ஆண்கள் அந்த பணத்தை வாங்கி சென்று மது அருந்தினர். இது குடும்ப பெண்களுக்கு சேர்வதில்லை. இந்த பொங்கல் பண்டிகை நாட்களில் பெண்களிடம் கொடுத்தால் குடும்பமே சந்தோசமடையும் என தெரிவித்தார்.

 

அதிமுகவின் திட்டங்களுக்கு, திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதாக கூறும் அதிமுகவினர் புகார் குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் உள்ள மாவட்டத்திற்கு ஒரு மருத்தவ கல்லூரி என்பது, முன்னாள் முதல்வர் கலைஞர் கொள்கை. இந்த திட்டத்தின் கீழ் கலைஞரின் ஆட்சி காலத்தில் தருமபுரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அளவில் மருத்துவ கல்லூரி இல்லை என எம்பி செந்தில்குமார் தெரிவித்தார்.