சென்னையில் உள்ள பழமையான பள்ளிகளில் எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலரும் மருத்துவம், சட்டம், காவல், ஆட்சி நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ளனர். 
தற்போது ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும், இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 7 பேர் போட்டியிட உள்ளனர். தி.மு.க. சார்பில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் வெற்றியழகன், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியில் எழிலன் நாகநாதன் ஆகியோர் இந்த பள்ளியில் பயின்றவர்கள்.




அதேபோல, மக்கள் நீதிமய்யம் சார்பில் மாதவரம் தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் கொண்டல்சாமி, ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ராஜாகுமார் ஆகியோர் டான் பாஸ்கோ பள்ளியின் முன்னாள் மாணவர்கள். 
இவர்கள் தவிர, அ.தி.மு.க. சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் அமிர்தராஜ் ஆகியோரும் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவார். ஒரே பள்ளியில் பயின்ற 7 முன்னாள் மாணவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை ஆகும்.