என்.ஐ.ஏ வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் சிம் கார்டு உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர்கள் இம்தியாஸ்(29), ரிஸ்வான் அகமது(28), சாஜித் அகமது(30) இவர்கள் வீடுகளில் கடந்த 2019ம் ஆண்டு தீவிராவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்குமோ  என்ற சந்தேகத்தின்பேரில் என்ஐஏ போலீசார் அதிரடியாக புகுந்து சோதனையிட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டனர். அதேபோல் முத்துப்பேட்டை தென்னை மரக்கடை தெருவை சேர்ந்த முகமது மைதீன் மகன் அசாரூதீன் என்பவர் அரபு நாடுகளில் உள்ள அன்சுருல்லா' இயக்கத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 2019ம் அவரின் வீட்டில் சோதனை செய்து கைது செய்தனர். தற்போது அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோவை கார் வெடித்த சம்பவம் எதிரொலியாக ஏற்கனவே குற்ற சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் சோதனை சில தினங்களாக நடந்து வரும் நிலையில் இன்று காலை திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில், முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் நேரடி மேற்பார்வையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர்  மகாலட்சமி, எடையூர் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன், கலப்பால் இன்ஸ்பெக்டர் விஜயா, திருக்களார் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை போலீசார் சுமார் 30க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற உத்தரவை பெற்று மேற்க்கண்ட 4 பேரின் வீடுகளுக்குள் உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 




வீடுகளில் சோதனை முடிந்த நிலையில் 4 பேரின் வீடுகளில் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று சைபர் கிரைம் காவல்துறையின் மூலமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு சிம் கார்டு, இரண்டு பென் டிரைவ் மற்றும் மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் பென்டிரைவ் சிம் கார்டு ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று டிஜிபி அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 300 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளானர். மாவட்டம் முழுவதும் 13 சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வெளி மாநில வெளி மாவட்ட நபர்கள் காரணம் இன்றி தங்கி உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி உள்ளனர்.




அதேபோன்று நம்பர் பிளேட் இல்லாமல் வரும் வாகனங்கள் மற்றும் வெளி மாநில வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கும் விடுதிகளில் யாரும் வந்து தங்குவதற்கு அனுமதி கேட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் நம்பர் பிளேட் பொருத்தாமல் வாகனங்கள் யாரேனும் இயக்கினால் உடனடியாக அவர்களை மறைத்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். அது மட்டும் இன்றி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.