மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அன்னைத் தமிழுக்கு அரும்பணியாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மூலம் இனி ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் என்பதற்குப் பதிலாக 150 தமிழறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு
2025-2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில், கடந்த 16.04.2025 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் தற்போது ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு 150 ஆக உயர்த்தப்படும் என்றும், இதற்கெனத் தொடர் செலவினமாக ரூபாய் 48 இலட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது பயனாளிகளின் எண்ணிக்கையை 100-இலிருந்து 150 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
உதவித்தொகையின் முழு விவரம்
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்த் தொண்டில் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு, முதுமைக் காலத்திலும் பொருளாதார வறுமை தாக்காவண்ணம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாதாந்திர உதவித்தொகை: ரூ.7,500/-.மருத்துவப் படி: ரூ.500/-.
மொத்தம்: திங்கள்தோறும்( மாதம் தோறும் ) ரூ.8,000/- அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
இந்த உதவித்தொகையானது தமிழறிஞர்கள் தங்கள் வாழ்நாட்காலம் முழுவதும் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
சலுகைகள்
இந்த உதவித்தொகை மட்டுமின்றி, தகைமை கொண்ட அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் அரசு வழங்குகிறது.
மேலும், தமிழுக்காகத் தொண்டாற்றிய இந்த உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னரும் இத்திருத்தொண்டு தொடர்கிறது. அவர்களின் வாழ்விணையர் (கணவன்/மனைவி), அல்லது திருமணமாகாத மகள், அல்லது கைம்பெண் மகள் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.2,500/- மற்றும் மருத்துவப் படியாக ரூ.500/- என மாதந்தோறும் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள்
2025-2026ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
* வயது: 01.01.2025 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
* வருவாய்: ஆண்டு வருவாய் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்).
* பிற உதவித்தொகை: மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.
தேவையான ஆவணங்கள்:
* தமிழ்ப் பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு.
* தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று (இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்).
* ஆதார் அட்டை நகல்.
* குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு).
* மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
விண்ணப்பப் படிவத்தினை மண்டல / மாவட்டத் தமிழ் வளர்ச்சி துணை / உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலிருந்தும் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட மூல விண்ணப்பத்தை நேரிலும், அல்லது tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவும் சமர்ப்பிப்பது கட்டாயம் ஆகும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் மற்றும் சமர்ப்பிக்கும் இடம்
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 17.11.2025 ஆகும்