மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) மூலம் பல்வேறு கடன் திட்டங்கள் மிகக் குறைந்த வட்டியில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் இந்தக் கடன் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தித் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கியக் கடன் திட்டங்கள் மற்றும் வட்டி விகிதங்கள்
சிறுபான்மையின மக்களின் தொழில் மற்றும் கல்வி வளர்ச்சிக்காகத் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினைக் கலைஞர்களுக்கான கடன்) மற்றும் கல்வி கடன் ஆகிய நான்கு முக்கியக் கடன் திட்டங்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படுகின்றன.
வருமான வரம்பு மற்றும் திட்டப் பிரிவுகள்
சிறுபான்மையின மக்களுக்குக் கடன் வழங்கப்படுவதற்கு இரண்டு திட்டப் பிரிவுகள் (Scheme 1 & Scheme 2) வரையறுக்கப்பட்டுள்ளன. இவை பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானத்தைப் பொறுத்து மாறுபடும்.
*திட்டம் 1: கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் உள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படும்.
* திட்டம் 2: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- வரை உள்ளவர்களுக்கு (திட்டம் 1-ன் கீழ் பயன் பெற முடியாத நபர்கள்) இத்திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படும்.
1. தனிநபர் கடன் திட்டம்:
சுய தொழில் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான செயல்பாடுகளுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது.
* திட்டம் 1 - ரூ. 20,00,000 ஆண்டுக்கு 6% |
* திட்டம் 2 - ரூ. 30,00,000 ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6%
2. சுய உதவிக் குழு கடன்:
சிறு தொழில் தொடங்கும் சுய உதவிக் குழுக்களுக்கு நபர் ஒருவருக்குக் கடன் வழங்கப்படுகிறது.
* திட்டம் 1 - ரூ. 1,00,000 ஆண்டுக்கு 7%
* திட்டம் 2 - ரூ. 1,50,000 ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8%
3.விராசாத் கடன் (கைவினைக் கலைஞர்கள்)
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள் அல்லது இயந்திரங்கள் வாங்குவதற்கு இத்திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
ரூ. 10,00,000 ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4%
4. கல்வி கடன் திட்டம்:
சிறுபான்மை மாணவ-மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்கு இக்கடன் உதவி வழங்கப்படுகிறது.
* திட்டம் 1 - ரூ. 20,00,000 வரை ஆண்டுக்கு 3%
* திட்டம் 2 - ரூ. 30,00,000 வரை மாணவர்களுக்கு 8%, மாணவியர்களுக்கு 5%
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்
சிறுபான்மையின மக்கள் இந்தக் கடன் திட்டங்களைப் பெற, கீழ்க்கண்ட அலுவலகங்களில் கடன் விண்ணப்பங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து, வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்:
* மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்.
* மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம்.
* மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள்.
* நகர கூட்டுறவு வங்கி.
* தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி.
கடன் விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் (பொதுவானவை):
* சிறுபான்மையினர் மதச் சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் நகல்.
* வருமானச் சான்றிதழ் நகல்.
* உணவுப் பங்கீட்டு அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ் நகல்.
* ஆதார் அட்டை நகல்.
* திட்ட அறிக்கை (தொழில் கடன்களுக்கு).
* வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள்.
கல்விக் கடனுக்குக் கூடுதலாகத் தேவைப்படுபவை:
* குடும்ப அட்டை / வாழ்விடச் சான்று (ஸ்மார்ட் கார்டு) நகல்.
* பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்.
* உண்மைச் சான்றிதழ் அசல் (Bonafide Certificate).
* கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது (அசல்).
* மதிப்பெண் சான்றிதழ் நகல்.
எனவே, இந்த அரிய வாய்ப்பைச் சிறுபான்மையின மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் தொழில் மற்றும் கல்வி நிலையை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.