இந்திய அரசு 2024 -ஆம் ஆண்டுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விருது நாட்டின் சாகச வீரர்களை கௌரவிக்கும் ஒரு விருதாகும். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Continues below advertisement

டென்சிங் நார்கே தேசிய சாகச விருது 2024

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சாகசத் துறையில் சிறந்து விளங்கும் தனிநபர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் உயரிய விருதான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான (Tenzing Norgay National Adventure Award) விண்ணப்பங்கள் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024 -ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு தகுதியான சாகச வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த அரிய வாய்ப்பை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தீர சாகசச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். "மயிலாடுதுறை மாவட்டம் சாகச உணர்வு மிக்க பல இளைஞர்களையும், தனிநபர்களையும் கொண்டுள்ளது. இந்த விருது, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து தேசிய அளவில் அங்கீகாரம் பெற ஒரு சிறந்த வாய்ப்பாகும். மலையேறுதல், நீர் சாகசங்கள், வான்வழி சாகசங்கள், மீட்புப் பணிகள் மற்றும் வேறு எந்த வகையான சாகசச் செயல்களிலும் ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பித்து, நமது மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும்" என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.

Continues below advertisement

இந்தியாவின் உயரிய சாகச விருது

டென்சிங் நார்கே தேசிய சாகச விருது, இந்திய சாகச உலகிற்கு ஒரு மைல்கல்லாக திகழ்கிறது. உலகப் புகழ்பெற்ற மலையேறு வீரர் டென்சிங் நார்கேயின் நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது. இது நிலம், நீர், வான்வழி சாகசங்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் சாகசச் சாதனைகளை நிகழ்த்திய வீரர்களுக்கு அவர்களின் துணிச்சல், சாகச உணர்வு மற்றும் முன்மாதிரியான சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது. இந்தியாவின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது. சாகச விளையாட்டுகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதும், சாகசத் துறையில் இந்தியாவின் திறனை உலகிற்கு வெளிப்படுத்துவதும் இந்த விருதின் முக்கிய நோக்கங்களாகும். இந்த விருது, சாகசத் துறையில் தேசிய அளவிலான அங்கீகாரத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு சாகசச் செயல்களில் ஈடுபட ஒரு உத்வேகத்தையும் அளிக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி

இந்த மதிப்புமிக்க விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சாகச வீரர்கள், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ விருதுகள் இணையதளமான https://awards.gov.in என்ற முகவரியைப் பயன்படுத்தலாம். இந்த இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தையும், விருது தொடர்பான இதர விரிவான தகவல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மேற்கண்ட அதே இணையதள முகவரியிலேயே, 2025 -ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நேரத்தில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

யாருக்கெல்லாம் வாய்ப்பு?

இந்த விருது, குறிப்பிட்ட சாகசச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொதுவாக, கீழ்க்கண்ட பிரிவுகளில் சாதனைகள் நிகழ்த்தியவர்கள் விண்ணப்பிக்கலாம்:

 

  • நில சாகசங்கள் (Land Adventure): மலையேறுதல், பனிச்சறுக்கு, பாறை ஏற்றம், பாலைவன சாகசங்கள், குகை ஆராய்ச்சி, நீண்ட தூர நடைபயணங்கள் போன்றவை.

 

  • நீர் சாகசங்கள் (Water Adventure): நீச்சல், படகுப்போட்டி, கயாகிங், ராஃப்டிங், ஸ்கூபா டைவிங், சர்ஃபிங், படகோட்டுதல் போன்றவை.

 

  • வான்வழி சாகசங்கள் (Air Adventure): பாராசூட் ஜம்பிங், பாராகிளைடிங், ஹாட் ஏர் பலூன், கிளைடிங், மைக்ரோலைட் விமானம் ஓட்டுதல் போன்றவை.

 

  • வாழ்நாள் சாகச சாதனை (Life Time Achievement): சாகசத் துறையில் நீண்டகாலமாக ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

 

விண்ணப்பதாரர்கள், தாங்கள் நிகழ்த்திய சாகச செயல்கள் குறித்த விரிவான தகவல்கள், சாதனைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விருதின் முக்கியத்துவம்

டென்சிங் நார்கே தேசிய சாகச விருது, வெறும் ஒரு கௌரவம் மட்டுமல்ல. இது சாகசத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்த விருதின் மூலம், சாகசச் செயல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும். சாகசத் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், இந்த விருதை ஒரு உத்வேகமாகக் கொண்டு, புதிய சாகசங்களை நிகழ்த்த முன்வர வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சாகச வீரர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்த முன்வர வேண்டும். தங்களின் சாகசச் சாதனைகளைதேசிய அளவில் பதிவு செய்ய இது ஒரு பொன்னான வாய்ப்பு.