நாடாளுமன்ற தேர்தல் 


இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதியான இன்று நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற ஜுன் 4 -ம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.




சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்.


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காலை ஏழு மணிக்கு வாக்கு பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி 23.29 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மகாதானத் தெருவில் 143 மற்றும் 144 வது வாக்குச்சாவடி மையத்தில் கடந்த தேர்தலில் 1189 வாக்குகள் இருந்துள்ளது. ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் 644 வாக்குகள் மட்டுமே உள்ளதாகவும் 541 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வாக்காளர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து வாக்குச்சாவடி முன்பு ஏராளமானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 




மேலும் திட்டமிட்டு தங்கள் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் வாக்குகள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாகவும் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வாக்குப்பதிவு உரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பெயர் விடுப்பட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் வாக்களிக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.




தொகுதி விபரம்


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 - மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.




 வாக்குசாவடிகள் விபரம்


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் உள்ளன.


பதட்டமான வாக்குசாவடிகள்


மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பதற்றமான வாக்குசாவடிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 39 பதற்றமான வாக்குசாவடிகளும் என மொத்தம் 89 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாக்குசாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குசாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். 




வாக்குப்பதிவு அலுவலர்கள்


மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்கள் 4213 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்படுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்கள் 4346 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். சுதந்திரமான நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 குழுக்கள் வீதம் 9 பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.