மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விடக் குறைந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தாண்டு மாவட்டத்தில் 90.53 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Continues below advertisement

தேர்ச்சி புள்ளிவிவரங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 167 அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். மாணவர்கள் 5,936 பேர், மாணவிகள் 6,049 பேர் என மொத்தம் 11,985 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர்.  இதில் 10,850 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், மாணவர்கள் 5,187 பேரும், மாணவிகள் 5,663 பேரும் அடங்குவர்.

தேர்ச்சி சதவீதம்

மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.53% ஆகும். வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Continues below advertisement

மாணவர்கள் தேர்ச்சி: 87.38 சதவீதம்

 மாணவிகள் தேர்ச்சி: 93.62 சதவீதம்

மாணவர்களை விட மாணவிகள் சுமார் 6.24 சதவீதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்று, தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டை விட பின்னடைவு

இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் கல்வித் துறைக்குச் சற்று ஏமாற்றமான முடிவுகளே கிடைத்துள்ளன. கடந்த 2025-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.90 இருந்த நிலையில் இந்தாண்டு 2026-ம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 90.53 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.37 சதவீதம் தேர்ச்சி குறைவாகும்.

மாநில தரவரிசையில் சறுக்கல்

தேர்ச்சி சதவீதத்தில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, மாநில அளவிலான தரவரிசையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 23-வது இடத்தில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம், இந்த ஆண்டு 10 இடங்கள் பின்தங்கி 33-வது இடத்தைப் பிடித்துள்ளது. அண்டை மாவட்டங்களான தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மயிலாடுதுறை பின் தங்கியிருப்பது கல்வி ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அளவிலான விபரம் 

மாநில அளவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 93.80% ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 0.51% உயர்ந்துள்ளது.  மொத்தம் 8,70,643 மாணாக்கர்கள் தேர்வெழுதிய நிலையில் அதில் 8,21,105 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

96.47% மாணவிகள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.47% (4,19,891) மாணவிகளும், 92.15% (4,01,214) மாணவர்களும் தேர்ச்சி பெற்ற நிலையில் மாணவர்களைவிட 4.32% மாணவியர் அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். 

முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள் 

மாநில அளவில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாவட்டங்கள்:

1.புதுக்கோட்டை - 97.57%

2.சிவகங்கை - 97.54%

3.தஞ்சை - 97.41%

4.திருச்சி - 97.31%

5.கன்னியாகுமரி - 97.30%

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு

தேர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், கடினமான சூழலிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். தோல்வியுற்ற மாணவர்கள் மனச்சோர்வடையாமல், அடுத்து வரும் உடனடித் தேர்வுகளில் (Supplementary Exams) பங்கேற்று வெற்றி பெற உரிய ஆலோசனைகளை வழங்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில் இந்தத் தேர்வு முடிவுகள் மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. குறிப்பாகப் பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.