நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் திடீரென ஏற்படும் இடி மற்றும் மின்னல் காரணமாக பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களின் உயிரையும் உடமைகளையும் காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.
இடி மற்றும் மின்னல் நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்னல் மற்றும் இடி தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உடனடிப் பாதுகாப்பு
இடி சத்தம் கேட்டவுடன் வெளிப்புற செயல்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும். உடனடியாக ஒரு பாதுகாப்பான கட்டடம் அல்லது முழுமையாக மூடப்பட்ட வாகனத்திற்குள் செல்ல வேண்டும்.
திறந்தவெளிகளைத் தவிர்க்கவும்: வயல்கள், படகுகள், கூரைகள் மற்றும் பிற திறந்த பகுதிகளை விட்டு உடனடியாக விலகியிருக்க வேண்டும்.
சிறப்புக் கவனம்: குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு முன்னதாகவே அழைத்துச் செல்ல வேண்டும்.
30 நிமிட விதி: இறுதி இடி முழக்கம் கேட்டதில் இருந்து 30 நிமிடங்கள் ஆகும் வரை வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தங்குமிடம் இல்லாத பட்சத்தில்: ஒருவேளை திறந்தவெளியில் மாட்டிக்கொண்டு தங்குமிடம் கிடைக்காவிட்டால், கால்களை ஒன்றாக வைத்து தரையில் குனிந்து அமர வேண்டும். பொதுமக்கள் கூட்டமாக இருந்தால், ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு தள்ளி நிற்க வேண்டும்.
வீட்டுக்குள் பாதுகாப்பு: வீட்டின் ஜன்னல், கதவு, பால்கனி மற்றும் வராண்டா அருகில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மின் சாதனங்களின் மின் இணைப்பை (Plugs) முற்றிலும் துண்டிக்க வேண்டும்.
வாகனப் பாதுகாப்பு: வாகனத்தில் பயணம் செய்யும் போது இடி மின்னல் ஏற்பட்டால், வாகனத்தின் ஜன்னல்களை முழுமையாக மூடிவிட்டு உள்ளேயே இருக்க வேண்டும்.
முன்னேற்பாடுகள்: அதிகாரபூர்வ வானிலை எச்சரிக்கையையும், TN Alert மொபைல் செயலியையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வீடுகளைச் சுற்றியுள்ள பலவீனமான மரங்களையும், மரக்கிளைகளையும் வெட்டி ஒழுங்குப்படுத்த வேண்டும். கால்நடைகளையும், கோழிகளையும் பாதுகாப்பான கொட்டகைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
இடி மற்றும் மின்னல் நேரத்தில் செய்யக்கூடாதவை
மின்னல் ஆபத்து அதிகம் உள்ள நேரங்களில் பொதுமக்கள் செய்யக்கூடாத தவறுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளதாவது.
மரங்களின் அடியில் நிற்கக் கூடாது: இடி மற்றும் மின்னல் ஏற்படும் நேரங்களில் மக்கள் கூட்டமாக நிற்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மரத்தின் அடியில் அல்லது மரத்தின் அருகில் எக்காரணம் கொண்டும் நிற்கக்கூடாது.
வெட்டவெளி ஆபத்து: வெட்டவெளியில் மல்லாந்து படுக்கவோ, கைகளால் தரையினைத் தொடவோ கூடாது.
நீர்நிலைகள்: ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் நிற்கவோ, நடக்கவோ அல்லது குளிக்கவோ கூடாது. வீட்டுக்குள்ளும் குழாய்கள், ஷவர்கள் அல்லது பிற நீர்க்குழாய் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
விலங்குகள் பாதுகாப்பு: செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் உலோகச் சங்கிலியால் கட்டி வைக்கக் கூடாது.
மின்சார அபாயம்: அறுந்து விழுந்த மின்கம்பிகளையும், சேதமடைந்த மின் கம்பங்களையும் தொடக்கூடாது. மின் சாதனங்களை ஈரமான கைகளால் கையாளக்கூடாது. மேலும், இடி மற்றும் மின்னல் நேரங்களில் அலைபேசி (Mobile Phones) மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளைப் (TV) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அவசர முதலுதவி மற்றும் மீட்பு நடவடிக்கை
முக்கியக் குறிப்பு: "திடீரென இடி மற்றும் மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவரின் உடலில் மின்சாரம் பாய்ந்திருக்காது. எனவே, அவரைத் தொடுவது முற்றிலும் பாதுகாப்பானது" என்று மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக உலர்ந்த பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அவரது சுவாசம் மற்றும் நாடித்துடிப்பைச் சரிபார்க்க வேண்டும். அந்த நபர் சுவாசிக்க சிரமப்பட்டாலோ அல்லது சுவாசம் நின்றிருந்தாலோ அவருக்கு உடனடியாக அவசர முதலுதவி சிகிச்சையான சி.பி.ஆர் (CPR - Cardiopulmonary Resuscitation) வழங்கி, தாமதிக்காமல் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
