மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் இன்று அதிரடியாக அடைக்கப்பட்டன. "ஊழியர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும், கடைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய 'பத்து ரூபாய்' விவகாரம்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக நீண்ட நாட்களாகவே புகார்கள் எழுந்து வருகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய், "பாட்டிலுக்கு பத்து ரூபாய்... பாட்டிலுக்கு பத்து ரூபாய்..." என்று பாடி, இந்த விவகாரத்தை மிகத்தீவிரமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். விஜய் தலைமையில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் கூட, டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து இந்த கூடுதல் கட்டண வசூல் நடைபெற்று வருவதாகக் கூறி, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சீர்காழியில் வெடித்த மோதல்- ஊழியர்கள் மீது வழக்கு
இதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள ஒரு அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில், மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாகத் தெரிகிறது. இதனைத் தட்டிக்கேட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர், இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் விற்பனையாளர் (Salesman) ஆகிய இருவர் மீது சீர்காழி காவல்துறையினர் அரசு விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், இன்று காலை முதல் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் திடீர் கடை அடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.
இதன் காரணமாக, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள மொத்தம் 42 அரசு மதுபானக் கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டுக் கிடந்ததால், மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாவட்டத்தின் ஒட்டுமொத்த டாஸ்மாக் விற்பனையும் இதனால் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் முற்றுகை
வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் திரண்டு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரைச் சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர் சங்கப் பிரதிநிதிகள், தங்களின் தரப்பு நியாயங்களையும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான பின்னணியையும் அடுக்கடுக்கான காரணங்களாக முன்வைத்தனர்.
டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய வாதங்கள் மற்றும் கோரிக்கைகள்
கூடுதல் ஊழியர்கள் நியமனம்: டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ 8 லட்சம் வரை விற்பனை நடைபெறுகிறது. இவ்வளவு பெரிய விற்பனையைக் கையாள அரசு வெறும் இரண்டு ஊழியர்களை மட்டுமே நியமித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த எங்களது சொந்தப் பொறுப்பில் கூடுதலாக 10 தற்காலிக ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டியுள்ளது.
கூடுதல் செலவினங்கள்: கடையின் கூடுதல் வாடகை, மின்கட்டணம் மற்றும் லாரிகளில் இருந்து மதுபானப் பெட்டிகளை இறக்கும் போது லாரி தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் 'மாமுல்' உள்ளிட்ட பல்வேறு மறைமுகச் செலவுகளை ஊழியர்களே ஏற்க வேண்டியுள்ளது. இந்தச் செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காவல்துறை பாதுகாப்பு: போதையில் வருபவர்களால் ஊழியர்களின் உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே, அனைத்து கடைகளுக்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
வழக்குகளை வாபஸ் பெறுக: சீர்காழியில் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்:
"அரசு எங்களது பணிச்சுமையையும், மறைமுகச் செலவுகளையும் புரிந்துகொள்ளாமல் ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது" என்று தெரிவித்த ஊழியர்கள், தங்களது நியாயமான கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் நிர்வாகமும் நிறைவேற்றும் வரை கடைகளைத் திறக்கப்போவதில்லை என்றும், வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
மாவட்ட அளவில் தினமும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகள் ஒட்டுமொத்தமாக அடைக்கப்பட்டிருப்பது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பிலும் கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
