மயிலாடுதுறை:‌ மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிவிட்டு திரும்பிய கொத்தனார் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

Continues below advertisement

மது வாங்கி திரும்பியபோது நேர்ந்த சோகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கீழ வீதியைச் சேர்ந்தவர் பாலு (வயது 60). இவர் கட்டிட வேலை செய்யும் கொத்தனார் ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வழக்கம்போல் நேற்று தனது கட்டிடப் பணிகளை முடித்துக்கொண்ட பாலு, மாலை நேரத்தில் மங்கைமடம் பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்குச் சென்றுள்ளார். 

மாலை நேரம் என்பதால் கடையில் வழக்கத்தை விட மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது. கடும் கூட்ட நெரிசலுக்கு இடையே பாலு தனக்கு வேண்டிய மதுபானத்தை வாங்கியுள்ளார். டாஸ்மாக் கடையில் மதுபானத்தை வாங்கிக்கொண்டு அவர் கடையை விட்டு வெளியே திரும்பியபோது, திடீரென அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.

Continues below advertisement

மருத்துவமனையில் அனுமதி - மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்

பாலு திடீரென மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த சக மதுப்பிரியர்களும், அப்பகுதி பொதுமக்களும் உடனடியாக அவரை மீட்டு, மங்கைமடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு (கிளினிக்) சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பாலுவை தீவிரமாகப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைபாடு காரணமா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்

இச்சம்பவம் குறித்து திருவெண்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் திருவெண்காடு காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த பாலுவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக (பிரேத பரிசோதனை) சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

கொத்தனார் பாலு டாஸ்மாக் கடைக்குச் சென்ற இடத்தில் உயிரிழந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியதால், மங்கைமடம் மற்றும் திருவெண்காடு பகுதி பொதுமக்கள் மற்றும் பாலுவின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். தொடர்ந்து, குடியிருப்பு மற்றும் முக்கிய கடைவீதிப் பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையினால் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகக் கூறி, மங்கைமடம் முக்கிய சாலையில் பொதுமக்கள் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் முன்வைத்த  கோரிக்கைகள்

குடியிருப்பு மற்றும் கடைவீதிப் பகுதியில் அச்சுறுத்தலாக விளங்கும் மங்கைமடம் டாஸ்மாக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். உயிரிழந்த கொத்தனார் பாலுவின் குடும்பத்திற்கு அரசு உரிய நஷ்டஈடு மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை - போராட்டம் வாபஸ்

சாலை மறியல் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, சீர்காழி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். "பாலுவின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும்" என்று டி.எஸ்.பி. சரவணன் உறுதியளித்தார்.

உயரதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்களது சாலை மறியல் போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த மங்கைமடம் கடைவீதி மற்றும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையினால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், தினந்தோறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதாகவும் கூறி, இக்கடையை இங்கிருந்து அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்துள்ள இந்த மரணம் அப்பகுதியில் மீண்டும் டாஸ்மாக் எதிர்ப்பு அலை கிளப்பியுள்ளது.