மயிலாடுதுறை: சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகளைக் கண்டித்து மயிலாடுதுறையில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில், "தமிழக அரசு ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக உடனடியாகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் வலியுறுத்தினார்.
பேரணி மற்றும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவத்தில் ஜாதிய வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக, அக்கட்சியின் மீதும், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மீதும் சில சமூக விரோதிகள் இணையதளங்களிலும் பொதுவெளியிலும் அவதூறான செய்திகளைப் பரப்பி வந்தனர்.
இந்த அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் (RTO) அலுவலகம் முன்பாகப் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, கூறைநாடு டி.இ.எல்.சி. (TELC) மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் திரண்டு பேரணியாகப் புறப்பட்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாகக் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு வந்த பேரணி, கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்து ஆர்ப்பாட்டமாக மாறியது.
தலைவர்கள் பங்கேற்பு
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ் உள்ளிட்ட கூட்டணி இயக்கங்களின் தலைவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களும் கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்பினர்.
சட்டப்பேரவையில் தனிச் சட்டம் தேவை: கே.சாமுவேல்ராஜ் பேட்டி
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் கூறியதாவது:"மயிலாடுதுறை மாவட்டத்தில் பல தலைமுறைகளாக நிலவிவரும் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஜாதியச் சக்திகளின் தவறான, நச்சுத் தன்மையுடைய பிரச்சாரங்களால் பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. ஜாதி அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை அரசு மிகக் கவனமாகக் கண்காணித்து, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முக்கியமாக, தமிழகத்தில் அதிகரித்து வரும் ஜாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்க, நடப்புச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே 'ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை' மாநில அரசு இயற்ற வேண்டும். அத்துடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக நீதிளுக்காகவும் களத்தில் நின்று போராடும் அரசியல் இயக்கங்களுக்கும், தலைவர்களுக்கும் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சமூகத்தைப் பிளவுபடுத்தத் துடிக்கும் பிரிவினைவாதிகள் மீது தயவுதாட்சணியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு மற்றும் விவசாயிகள் பிரச்சனை
'நீட்' தேர்வு முற்றிலும் அநீதியானது; அது மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி உயிரைப் பறிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் உரத்த கோரிக்கையாகும். நாடு தழுவிய அளவில் மாணவர்களும் மக்களும் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாகவே மத்திய அமைச்சர் தனது பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது. நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டம் இத்துடன் ஓயாது; அதனை ரத்து செய்யும் வரை மேலும் தீவிரப்படுத்துவோம்.
அதேபோல, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த முழுமையான கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். அப்படி அரசு செய்யத் தவறினால், மக்களையும் விவசாயிகளையும் திரட்டிப் போராட்டங்கள் வாயிலாகக் கடன் தள்ளுபடியைப் பெற முயல்வோம்.
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையான குடிநீர் மற்றும் பாசனத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வேளாண் குடிமக்கள் விவசாயம் செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாநில அரசு உடனடியாக தலையிட்டு, டெல்டா விவசாயிகளுக்குத் தேவையான பாசனத் தண்ணீரைப் பெற்றுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
