மயிலாடுதுறை நகராட்சி விரிவாக்கத்தில் ரூரல் ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கடைசி 38 வது மாவட்டம்


தமிழ்நாடில் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தின்  முதல் ஆட்சியராக இரா.லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் ஒவ்வொரு துறையாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து முழுமையாக இங்கு செயல்பட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேறு கட்டிடத்திலும் இயங்கியது. 




கட்டுமான பணிகள்


மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான இடத்தினை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பால்பண்ணை என்ற பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 23 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 114 கோடி திட்ட மதிப்பீட்டில் 7 மாடி கட்டிடமாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டடம் கட்டுமான பணிகளும் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகாமையில் தொடங்கப்பட்டுள்ளது.




சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்வு


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்ட பிறகு மன்னம்பந்தல் ஊராட்சி பகுதியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் சூழலில், மணக்குடி ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகிறது. அதனை தொடர்ந்து  மயிலாடுதுறை சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் நகராட்சி வார்டுகள் விரிவாக்கம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதனடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சியை ஒட்டியுள்ள ரூரல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்ற வருகிறது.




ரூரல் ஊராட்சியை நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு


இதனை அறிந்த மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரூரல் ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தலைவர் தியாகராஜன் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் 500 -க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்தனர்.  ஒரே கோரிக்கையை வலியுறுத்தி அதிகமான பொதுமக்கள் திரண்டதால் அவர்களை ஆட்சியர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் முக்கியஸ்தர்களை மட்டும் உள்ளே செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து நேரடியாக மக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சந்திப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் கார் அருகே தரையில் அமர்ந்து ஒருமணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து அங்கு வந்த ஆட்சிரிடம் மனுவை அளித்தனர்.




அந்த மனுவில், ரூரல் ஊராட்சியில் 85 சதவிகிதம் பேர் விவசாய கூலி மற்றும் நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும்,  நகராட்சியுடன் இணைத்தால் 85 சதவிகித மக்கள் கடுமையான நிதிநெருக்கடிக்கும், வேலை இழப்பிற்கும் ஆளாக நேரிடும். எனவே, ரூரல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென்று அதில் தெரிவித்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் மகாபாரதி தங்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.