விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், மயிலாடுதுறை அருகே சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி ரசாயனப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகள் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், இந்து அமைப்புகளின் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

திடீர் ஆய்வு மற்றும் சீல் வைப்பு

நாடுகள் முழுவதும் வருகின்ற 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பயன்படுத்தப்படும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நாடுமுழுவதும் தொழிலாளிகள் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், மூங்கில்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வந்த விநாயகர் சிலை தயாரிப்புக் கலைக்கூடத்தில், நேற்று முன்தினம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், விநாயகர் சிலைகள் தயாரிக்க சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டோபாரீஸ் (Plaster of Paris) என்ற ரசாயனப் பவுடர் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அந்தக் கலைக்கூடத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

Continues below advertisement

இந்து அமைப்புகளின் எதிர்ப்பு

இந்த நடவடிக்கை குறித்த தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் நாஞ்சில் பாலு மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள், "விநாயகர் சதுர்த்தி விழாவைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். முன்கூட்டியே ஆய்வு செய்யாமல், விழாவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கலைக்கூடத்தில் உள்ள அனைத்துச் சிலைகளுக்கும் ரசாயனம் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அனைத்துச் சிலைகளையும் முறையாக ஆய்வு செய்து, ரசாயனம் பயன்படுத்தப்பட்ட சிலைகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குற்றம்சாட்டி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

அதிகாரிகளின் மறு ஆய்வு மற்றும் சிலைகள் பறிமுதல்

இந்து அமைப்புகளின் புகாரைத் தொடர்ந்து, வட்டாட்சியர் சுகுமாறன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் அந்தக் கலைக்கூடத்திற்கு மீண்டும் சென்று ஆய்வு செய்தனர். பூட்டப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, உள்ளே இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டன. நீண்ட ஆய்வுக்குப் பின்னர், அதில் 10 சிலைகளில் மட்டும் பிளாஸ்டோபாரீஸ் ரசாயனம் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த 10 சிலைகளையும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

பலதரப்பட்ட கருத்துக்கள் 

மீதமுள்ள சிலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டவை என உறுதி செய்யப்பட்டதால், அந்தச் சிலைகளை விற்பனை செய்ய சிலை தயாரிப்பு மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விநாயகர் சிலை முன்பதிவு செய்திருந்த பக்தர்கள், தங்கள் பகுதிகளுக்குச் சிலைகளை எடுத்துச் செல்லும் பணிகளைத் தொடங்கினர்.

சிலைகளின் தயாரிப்புக்கான விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது. அதே சமயம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நடவடிக்கை, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன்னதாகவே, மாவட்ட நிர்வாகம் விதிமீறல்கள் மீது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது என்பதைக் காட்டுகிறது.