சீர்காழி அருகே கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரது மீதும் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தன் 


சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலட்சியத்தால் தவறான சிகிச்சை அளித்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழவல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி என்பவரது மகன் 48 வயதான ஆனந்தன். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள்  கொள்ளிடம் பகுதியில் உள்ள தனியார் (விஷ்ணு) மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். 




தவறான சிகிச்சை என குற்றச்சாட்டு 


தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஆனந்தன் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து மருத்துவர்கள் ஆனந்தனின் உறவினர்களிடம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்டு, ஆனந்தனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை மூடக்கோரியும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை முன்பு  ஏராளமான கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டனர்.




மருத்துவமனை வளாகம் சூறை


மேலும் மருத்துவமனை வாசலில் இருந்த கண்ணாடி கதவு அடித்து நெருக்கினர். பின்னர் ஆனந்தன் உடலை வாங்க மறுத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஈடுபட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்த சாலை மறியல் போராட்டத்தால் கொள்ளிடம்- சீர்காழி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் கூறு ஆய்வுக்காக ஆனந்தனின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினர் அனுப்பி வைத்து  ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 




போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு


இந்த சூழலில் மேற்படி விஷ்ணு மருத்துவமனையின் வெளிப்புற பகுதியை அடித்து சேதப்படுத்திய முன்று நபர்கள் மீது "தமிழ்நாடு மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் (வன்முறையையும், சொத்துக்கு சேதத்தினை அல்லது இழப்பினை ஏற்படுத்துவதையும் தடுத்தல்) சட்டம் 2008-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கின் எதிரிகளில் ஒருவரான கடலூர் மாவட்டம் கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த ஐய்யப்பன் என்பவரது மகன் ஹரிஹரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற எதிரிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களின் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.




காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை 


அதுமட்டுமின்றி மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களில் தாக்குதல் செய்தல் அல்லது பிற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.