மயிலாடுதுறையில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


தீக்காயம் ஏற்பட்ட காதல் ஜோடி


மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் 24 வயதான மகன் ஆகாஷ். இவர், பூம்புகார் அருகே உள்ள மேலையூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நாகப்பன் என்பவரின் 20 வயதான மகள் சிந்துஜா.  இவர், மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. 




காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு 


இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக மாணவி சிந்துஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் நேற்று பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆகாஷ் பழகி வரும் வேறு பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது. 




காதலன் கண்முன்னே தீக்குளித்த காதலி


அதனை அடுத்து மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்த சொன்ன சிந்துஜா, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தனது கண் முன்பு காதலி தீக்குளித்ததால் அதிர்ச்சி அடைந்த காதலன் ஆகாஷ் பதறித்துடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது ஆகாஷ் மீதும் தீப்பற்றியது. இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்து கீழே சரிந்துள்ளனர். இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 




உயிரிழந்த காதலன்


ஆகாஷ் 60 சதவீத தீ காயங்களும், சிந்துஜா 40 சதவீதம் தீ காயங்களுடன் இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிந்துஜா தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  முன்னதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருவரிடமும்  மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.




காவல்துறையினர் விசாரணை 


இந்நிலையில் இதுதொடர்பாக மயிலாடுதுறையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி திடீரென தீக்குளித்ததும், அவரை காப்பாற்ற முயன்றபோது காதலனும் தீக்காயம் அடைந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்


இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.