மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடி கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் கடந்த 2007 -ம் ஆண்டு முதல் பாதாளசாக்கடை திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் இந்த பாதாளசாக்கடை பராமரிப்பு பணிகளை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பராமரித்து வருகிறது. இந்நிலையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் தரமற்ற முறையில் பாதாளசாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் இணைப்புகளுக்கான இத்திட்டத்தில் அளவுக்கதிகமாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். 

இந்ந சூழலில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு குழாய் செல்லும் சாலைகளில் பெரிய பள்ளம் ஏற்பட்டுவது தொடர்ந்து வருகிறது. கச்சேரிரோடு, கண்ணாரத்தெரு, நகராட்சி அலுவலகம் எதிரே, தரங்கம்பாடி சாலை, தைக்கால்தெரு, கொத்தத்தெரு, சுமைதாங்கி, திருவாரூர் சாலை என்று 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் திடீரென்று உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டுவதும் அதனை தற்காலிகமாக சரிசெய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. 

Continues below advertisement

மேலும் பாதாளசாக்கடை பிரச்சனையால் மயிலாடுதுறையில் உள்ள 36 வார்டுகளிலும் அவ்வப்போது கழிவுநீர் பல்வேறு சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். 

இந்த சூழலில் கடந்த திமுக ஆட்சியின் போது மயிலாடுதுறைக்கு வருகை தந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர், இந்த திட்டத்தால் அரசு பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதை முழுமையாகப் புனரமைக்க சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரிந்துரை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து விடுபட்ட பகுதிகளுக்கு புதிய குழாய்கள் அமைத்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக ரூபாய் 82 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடரும் கழிவுநீர் சீர்கேடு 

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்ற போதிலும், நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆழ்துளைத் தொட்டிகள் (Manholes) வழியாக வெளியேறி வருகிறது. முக்கியமாக மாருதி நகர், அவையாம்பாள்புரம், பட்டமங்கலத் தெரு, கூரைநாடு உள்ளிட்ட இடங்களில் தினமும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி நகர் முழுவதும் கடுமையான சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நகராட்சி நிர்வாகம், இந்த சாக்கடை கழிவுநீரை மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் நேரடியாக திறந்து விடுவதாகவும் பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

ரஸ்தா மனவெளி தெருவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை

குறிப்பாக, ரஸ்தா மனவெளி தெரு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவுநீர் ஆழ்துளைத் தொட்டி வழியாக சாலையில் தொடர்ச்சியாக வழிந்தோடி வருகிறது. இதிலிருந்து வீசும் தாங்க முடியாத துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்து, காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் வேதனை

இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான சீரமைப்பு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியப்போக்கு காட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தினமும் சாக்கடை நீரைக் கடந்து செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுமக்கள், இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு பாதாள சாக்கடைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.