நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நகராட்சியில் தூய்மையைப் பராமரிக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யவும் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் கீழ், உருவாகும் கழிவுகளை மூலத்திலேயே நான்கு வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்துச் சேகரிக்கும் திட்டம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நகரம் முழுவதிலும் உள்ள அனைத்துக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களால் உருவாகும் நகராட்சித் திடக்கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே கட்டாயமாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். கழிவுகளைத் தரம் பிரிக்காமல் ஒட்டுமொத்தமாகக் கலந்து வழங்கும் பழைய முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னரே தகுந்த வண்ணக் குறியீட்டுத் தொட்டிகள் அல்லது பைகளில் பிரிக்கப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வண்ணக் குறியீட்டுத் தொட்டிகள் மற்றும் சேகரிப்பு அட்டவணை
கழிவுகளைச் சேகரிக்க நகராட்சி சார்பில் நான்கு வண்ணக் குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தினசரி சமையலறை மற்றும் உணவுக் கழிவுகளான ஈரக்கழிவுகளுக்குப் பச்சை நிறத் தொட்டியும், மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய உலர்கழிவுகளுக்கு நீல நிறத் தொட்டியும், பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள் மற்றும் நாப்கின்கள் அடங்கிய சுகாதாரக் கழிவுகளுக்குச் சிவப்பு நிறத் தொட்டியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பெயிண்ட் டப்பாக்கள், மின்கலன்கள், ஈ-வேஸ்ட் அடங்கிய சிறப்புக் கவனத்திற்குரிய வீட்டு அபாயகரக் கழிவுகளுக்குக் கருப்பு நிறத் தொட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பச்சை, நீலம் மற்றும் சிவப்பு தொட்டிகளில் உள்ள கழிவுகள் தினமும் வீடு வீடாகச் சேகரிக்கப்படும். ஆனால், கருப்புத் தொட்டியில் உள்ள அபாயகரக் கழிவுகள் மட்டும் வாரத்திற்கு ஒரு முறை, அதாவது ஒவ்வொரு புதன்கிழமையும் சேகரிக்கப்படும்.
நான்கு வகை கழிவுகளின் விரிவான விவரங்கள்
இந்த நான்கு வகை கழிவுகளின் விரிவான விவரங்களை நகராட்சி அறிவித்துள்ளது. முதலாவதாக, பச்சைத் தொட்டியில் சேகரிக்கப்படும் ஈரக்கழிவில் உணவுக் கழிவுகள், காய்கறிகள், பழங்கள், இறைச்சிக் கழிவுகள், உதிர்ந்த பூக்கள், தேயிலைத் தூள் மற்றும் பிற மக்கும் கரிமக் கழிவுகள் அடங்கும்.
இரண்டாவதாக, நீலத் தொட்டியில் சேகரிக்கப்படும் உலர்கழிவில் காகிதங்கள், அட்டைகள், செய்தித்தாள்கள், பிளாஸ்டிக்ப் பாட்டில்கள், உலோகங்கள், கண்ணாடிகள், துணிகள் மற்றும் பேக்கிங் பொருட்கள் அடங்கும்.
மூன்றாவதாக, சிவப்புத் தொட்டியில் சேகரிக்கப்படும் சுகாதாரக் கழிவில் பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள், டாம்பன்கள், ஆணுறைகள் மற்றும் சிறுநீர்க் கசிவுத் தாள்கள் அடங்கும்.
நான்காவதாக, கருப்புத் தொட்டியில் சேகரிக்கப்படும் அபாயகரக் கழிவில் பெயிண்ட் டப்பாக்கள், பூச்சிக்கொல்லிக் கலன்கள், சி.எஃப்.எல் மற்றும் டியூப் லைட்டுகள், காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச வெப்பமானிகள், பேட்டரிகள், ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் (ஈ-வேஸ்ட்) ஆகியவை அடங்கும்.
பொதுமக்களுக்கான நகராட்சியின் முக்கிய எச்சரிக்கை
பொதுமக்கள் அனைவரும் நகராட்சியால் அறிவிக்கப்பட்ட நாட்களில், மூலத்திலேயே பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே உரிய வண்ணத் தொட்டிகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வகை பிரிக்கப்படாத கலவைக் கழிவுகள் எக்காரணம் கொண்டும் சேகரிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நகரை எழில்மிகு தூய்மை நகரமாக மாற்ற கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-க்குக் கட்டாயம் இணங்கி நடக்க வேண்டும் என நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
