மயிலாடுதுறையில் ஆட்டம் காட்டும் சிறுத்தை 


டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாட்டுவதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சிறுத்தையின் காலடி தடத்தை வைத்து சிறுத்தை ஊருக்குள் வந்துள்ளதை உறுதி செய்தனர். தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 3-ம் தேதி சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு , செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை தேடி வந்தனர்.

  




5 கிலோமீட்டர் சுற்றளவில் உலவும் சிறுத்தை 


இந்நிலையில் நேற்று அதிகாலை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் சிறுத்தை கடந்து சென்றதை பார்த்ததாக அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுட்டுள்ளனர். மூன்று கிலோமீட்டர் தூரம் சிறுத்தை கடந்து வந்து பதுங்கியுள்ளது. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு மார்க் செய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறுத்தையை பிடிப்பதற்கு வன உயிரின காப்பாளர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக அனுபவமுள்ள வன பணியாளர்கள் கள தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 




இரவு பகலாக தேடுதல் பணி


சிறுத்தை நடமாட்டம் உள்ள செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு மற்றும் ஊர்குடி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து 16 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர். இப்பகுதியில் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தைப் பிடிக்கும் பெரிய அளவிலான 2 கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைப் புலியை பிடிப்பதற்கு 13 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சிறுத்தையை கண்காணிக்க 16 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக விலங்குகளின் உடல் சூட்டை வைத்து அவைகள் இருட்டு மற்றும் காட்டுப் பகுதியில் இருந்தாலும் கண்டறியும் தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணிக்காக வரவழைத்துள்ளனர். இதனால் மூலம் இரவு வேளையில் சிறுத்தை நடமாட்டத்தை எளிதில் கண்டறிய முடியும் என தகவல் தெரிவித்துள்ளனர்.




பொதுமக்களால் இடையூறு


இந்நிலையில் வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் சிறுத்தை நடமாட்டம் பகுதிகளில் சிறுத்தையை பிடிக்க எடுக்கப்படும் முயற்சிகளில் சம்பந்தப்பட்ட ஊர் பொதுமக்கள் கூட்டமாக கூடி, சத்தம் எழுப்பி, சிறுத்தையை பிடிக்க மேற்கொள்ளும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்து வருகின்றனர். இதனால் அமைதியான சூழல் மாறி சிறுத்தை நடமாட்டத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், இடையூறு ஏற்பட்டு, சிறுத்தை வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்கின்ற சூழல் ஏற்படுகின்றது. மேலும் ஏதேனும் விபரீதம் ஏற்படுவதை தவிர்க்கவும், பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வனத்துறை மற்றும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.