தமிழகத்தின் கடைசி 38 வது மாவட்டமாக மயிலாடுதுறையை கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு தற்காலிக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
அதனை தொடர்ந்து 120 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் கட்டப்பட்டது. பணிகள் முடிவுற்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 04, 2024 அன்று புதிம மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல துறைகளை சேர்ந்த மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டு அங்கு செயல்பட தொடங்கியது.
எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வேலைவாய்ப்பு மோசடி கும்பல்கள் தங்களின் இலக்காக மாற்றினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள் காலியாக உள்ளதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, போலியான நியமன ஆணைகளை விநியோகித்து பணம் பறிக்கும் செயலில் மோசடி கும்பல்கள் நடமாடுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04.08.2024 ஆம் தேதி முதல் இயங்கி வருகின்றது. இந்நேர்வில் புதிய மாவட்ட ஆட்சியரகத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், அரசுப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக தெரிவித்தும், அலுவலக உதவியாளர்/ இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை விநியோகம் செய்தும், மோசடிகள் நடைபெறுவதாக மாவட்ட நிருவாகத்திற்கு ஏராளமான புகார் மனுக்கள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே பொதுமக்கள் இது போன்ற மோசடிகளை நம்பி பணத்தை மோசடியாளர்களிடம் அளிக்க வேண்டாம் எனவும், மேற்படி அரசுப் பணிக்கான காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக செய்தித்தாளில் விளம்பரம் செய்து அதன் மூலமாக மட்டுமே அரசுப்பணி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்து, யாரேனும் அணுகினால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்கள் கருத்து
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டம், மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றி, ஆகஸ்ட் 4, 2024 அன்று தனது புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது. புதிய ஆட்சியர் அலுவலகம் அமைந்த சில மாதங்களிலேயே, இங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில மோசடி கும்பல்கள், அப்பாவி மக்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுக்கென செல்வாக்கு இருப்பதாகவும், அதிகாரிகள் மட்டத்தில் தங்களுக்குப் பழக்கம் இருப்பதாகவும் கூறி, வேலையில்லா இளைஞர்களை குறிவைத்து வருகின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களைப் போல வேடமிட்டு, பொதுமக்களை அணுகி, 'வேலை வாய்ப்பு' என்ற பெயரில் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பல குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற ஆவலில், வட்டிக்கு கடன் வாங்கி அல்லது தங்கள் சேமிப்பை இழந்து இந்த மோசடி கும்பல்களிடம் பணத்தை இழந்துள்ளதாகத் தெரியவருகிறது. போலி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட பிறகுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பலர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி புகார் அளித்து வருகின்றனர்.
சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, தலைச்சங்காடு நேரு நகரை சேர்ந்த அனிதா மற்றும் மேலும் சில நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறை மாவட்டம் கருவாழக்கரை, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கிரிஜா அவரது கணவர் திருப்பூர் மாவட்டம், திருமுருகள்பூண்டி, அவினாசியை சேர்ந்த ரமேஷ் மற்றும் கிரிஜாவின் தாயார் கல்பனா ஆகிய மூவரும் 27 நபர்களிடம் ரூபாய் 86,40,000 பணம் பெற்று போலியான பணி ஆணைகளை கொடுத்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அனிதா மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் உரிய விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதன்படி அது தொடர்பான விசாரணையை மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் விஜயமுத்துகுமார் மேற்கொண்டார். விசாரணையில் மேற்கண்ட 1. கிரிஜா, 2. ரமேஷ் மற்றும் 3. கல்பனா ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 27 நபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
அதனை அடுத்து அவர்கள் முவர் மீதும் மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவில் நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முவரையும் கைதுசெய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விசித்திரமேரி, உதவி ஆய்வாளர் விஜயமுத்துகுமார் மற்றும் மேற்படி வழக்கின் விசாரணையை மேற்பார்வை செய்த துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்வாணன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெருவாக பாராட்டினார். தொடர்ந்து, விசாரணையை விரைந்து முடித்து எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார்.