மயிலாடுதுறை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்த அறிவிப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

தமிழக அரசு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்குத் தங்குமிடம், சத்தான உணவு மற்றும் சர்வதேச தரத்திலான அறிவியல் சார்ந்த விளையாட்டுப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

வயது வரம்பு மற்றும் தகுதி விவரங்கள்

இந்த சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்புவோர் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின்னரோ, அல்லது 01.07.2009 அன்று அல்லது அதற்கு முன்னரோ பிறந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

Continues below advertisement

கல்வி மற்றும் விளையாட்டுத் தகுதிகள்

* இளநிலை பட்டப்படிப்பு: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 2026-27 கல்வியாண்டில் கல்லூரிகளில் சேரவுள்ள மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்குச் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

* முதுநிலை பட்டப்படிப்பு: முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலைப் படிப்பின் போது சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

*இணையதள முகவரி:www.sdat.tn.gov.in

* கடைசி நாள்: மார்ச் 26, 2026 அன்று மாலை 5.00 மணி வரை.

*கூடுதல் விவரங்களுக்கு: 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மைய அலைப்பேசி எண்: 9514000777 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள்

விண்ணப்பித்த மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வுகள் 30.03.2026 அன்று காலை 7.00 மணியளவில் சென்னையில் உள்ள இரண்டு முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

தடகளம், பளுதூக்குதல், ஜூடோ, வாள்விளையாட்டு, கையுந்துபந்து  ஆண் மற்றும் பெண்  ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை 

கால்பந்து  ஆண் மட்டும் -  ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை.

ஹாக்கி, கபாடி ஆண் மற்றும் பெண்  மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், சென்னை.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விடுத்துள்ள அறிக்கையில்,

"மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நவீன அறிவியல் சார்ந்த பயிற்சிகளைப் பெற்று, மாநில மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் உரிய காலத்திற்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," எனத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குத் தமிழக அரசின் இந்தச் சிறப்பு விடுதித் திட்டம் ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.