மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைப்பட்ட சுருக்குமடி வலைகளை மீனவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினரின் பாதுகாப்புடன் மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றுள்ளனர்.


இருவேறு நிலைப்பாட்டில் மீனவர்கள்


மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் தனித்தனி அணியாக பிரிந்து சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். தரங்கம்பாடி மீனவர் கிராம தலைமையில் சுருக்குமடி வலைக்கு எதிராக பல்வேறு மீனவக் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேபோன்று பூம்புகார் தலைமையிலான சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். 




சுருக்குமடி வலைக்கு எதிரான போராட்டங்கள்


இந்நிலையில் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரங்கம்பாடி தலைமையிலான மீனவ கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த மீனவ கிராமங்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் உரிய முடிவு எட்டப்படாததால், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என்றும் பயன்படுத்துவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதனிடையே சுருக்குமடி வலை பயன்பாடு மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதாக கூறி சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தரங்கம்பாடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தரங்கம்பாடி தலைமையிலான மீனவ கிராமங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் சாலை மறியல் போராட்டம் முடிவை கைவிட்டு, 20 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொழில் மறியல் மற்றும் கடை அடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.




உறுதியளித்த மீன்வளத்துறை அதிகாரிகள்


தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு தரப்பிலான அதிகாரிகள் பங்கேற்று சுருக்குவலை மீன்பிடி  தொழிலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான விளக்கத்தை மீனவ கிராம மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி போராட்ட இடத்தில் மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி மற்றும் அதிகாரிகள் வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சுருக்குமடிவலை பயன்படுத்துபவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வலைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று மீனவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிக கைவிட்டு கலைந்து சென்றனர்.




வலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்


அதிகாரிகள் உறுதியளித்தபடி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்பட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவ கிராமத்திற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்குமடி வலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது அங்குள்ள மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கண்டு வாக்குவாதம் ஏற்பட்டது. சுருக்குமடி வலையை படகுகளில் வைத்து எடுத்துச்சென்று மீன்பிடித்தால்தான் அவற்றை பறிமுதல் செய்யவேண்டும் என மீனவர்கள் வாதிட்டனர்.




அதற்கு அதிகாரிகள் அரசால் தடைப்பட்ட வலைகள் எங்கு இருந்தாலும் அவைகள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை மீன்வளத்துறை இயக்குனர் இளம்வழுதி மற்றும் துறை அதிகாரிகள் பூம்புகார் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்தனர்.  இரண்டு நாட்கள் கால அவகாசம் வேண்டும் என மீனவர்கள் கேட்ட நிலையில், அதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் மறுத்து தெரிவித்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகளை லாரியில் ஏற்றி எடுத்துச்சென்றனர். இதனால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.