Just In





இரண்டுமாத காலம் மீனவர்களுக்கு திண்டாட்டம்... வளர்ப்பு மீன் வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்...ஏன் தெரியுமா?
இந்தாண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்குகி, 61 நாட்கள் இந்த அமலில் இருக்க உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-இன் படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலும் மீனவா்கள் இழுவலை விசைப்படகுகள் அல்லது தூண்டில், வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் மீன்பிடி தடைகால அமலுக்கு முன்னர் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் வரும் 14-04-2024 இரவு 12.00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப அனைத்து படகுகளுக்கும் அறிவுறுத்திடவும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் மூலம் அப்படகில் உள்ள மீனவர்களுக்கு VHF / SATATELITE PHONE பிற தகவல்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனடியாக கரைக்கு திரும்பிட தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.
61 நாட்கள் மீன்பிடி தடை
தமிழ்நாடில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, வரும் ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமல் படுத்தப்பட உள்ளது. இந்த தடை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்படும். மேலும் இந்த தடை காலத்தை பயன்படுத்தி அதனை ஆக்கப்பூர்வமானதாக மாற்றும் வண்ணம் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர்.
மீன்களின் விலை அதிகரிப்பு
மீன்பிடி தடைக் காலத்தின்போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக தடைப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா 8 ஆயிரம் ரூபாய் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இந்த மீன்பிடித்தடை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாதங்களுக்கு மீன்கள் மற்றும் இறைச்சியின் விலை அதிகரிக்கும். குறிப்பாக கடல் மீன்பற்றா குறையை சமாளிக்க மாற்றாக மீன் பிரியர்கள் வளர்ப்பு மீன்களை நாடி செல்வர். இதன் காரணமாக வழக்கதை விட கூடுதலாக விலைக்கு இந்த மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதற்கிடையே, இந்த மீன்பிடித் தடைக் காலத்தை வரும் அக்டோபர் மாதத்துக்கு மாற்ற வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் நீண்ட கால கோரிக்கை
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பருவ மழை தொடங்கும் நேரத்தில்தான் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இதற்கு மாறாக மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடித் தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கை நீண்ட காலமான கோரிக்கை என்றும், தற்போது மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டும் வரும் நிவராணத் தொகையை 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.