மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சம்பா கட்டளைப் பகுதியில், டிட்வா புயல் காரணமாகத் தேங்கிய மழைநீரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுகி விட்டது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்குக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement

வாழ்வாதாரம் இழந்த பெண் விவசாயிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தின் நெற்களஞ்சியப் பகுதிகளில் ஒன்றான திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சம்பா கட்டளை கிராமத்தில், கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளன. இப்பகுதியின் விவசாயப் பணிகளில் பெரும்பாலானவற்றை இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயிகளே முன்னின்று செய்து வருகின்றனர்.

கடந்த மாதம், இந்தப் பெண் விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், விதை நெல்லை நாற்றங்கால் விட்டு, பின்னர் அதனை முறையாக விளைநிலங்களில் நடவு செய்தனர். மழை நீர் மேலாண்மை மற்றும் பயிர் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி, முதலீட்டுடன் பணிகளை மேற்கொண்டனர்.

Continues below advertisement

இரண்டு முறை தாக்கிய இயற்கை சீற்றம்

விவசாயிகளின் துரதிர்ஷ்டவசமாக, நடவு செய்யப்பட்ட பயிர்கள் ஓரளவு வளர்ந்த நிலையில், கடந்த மாதம் பெய்த எதிர்பாராத மழையால் நெற்பயிர்கள் ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டன. அப்போது மனம் தளராத விவசாயிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், கூடுதல் உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தி, மிகுந்த போராட்டத்திற்குப் பின் நெற்பயிர்களை மீண்டும் காப்பாற்றி ஓரளவுக்குச் செழித்து வளரச் செய்தனர்.

ஆனால், விவசாயிகளின் இந்த உழைப்பைக் கடுமையாகச் சோதிக்கும் விதமாக, சமீபத்தில் வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, சம்பா கட்டளைப் பகுதியில் இந்த மழைநீர் வடிய வழியில்லாமல், விளைநிலங்களில் குளம் போலத் தேங்கி நிற்கிறது.

முற்றிலும் அழுகிய நெற்பயிர்கள்

பல நாட்களாகத் தேங்கி நிற்கும் இந்த மழைநீரில் சம்பா நெற்பயிர்கள் மூழ்கியதால், அவை முற்றிலும் அழுகிவிட்டன. பயிர்கள் அழுகி மண்ணோடு மண்ணாக மாறியதைக் கண்ட பெண் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயிகள் கண்ணீருடன் கூறுகையில், 

 "நாங்கள் கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலத்தில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்தோம். கடந்த மழைக்குப் பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு உரமிட்டு, அதிக முதலீடு போட்டு பயிரை மீட்டோம். ஆனால், இந்தப் புயல் மழையால் எங்கள் பயிர்கள் இப்போது சுத்தமாக அழுகிப் போய்விட்டன. இரண்டு போகப் பயிரிட்ட கஷ்டமும், முதலீடும் வீணாகிப் போய்விட்டது. எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இதற்கான கடனை எப்படி அடைப்பது என்று தெரியவில்லை." என வேதனை தெரிவித்தார்.

நிவாரணம் வழங்கக் கோரிக்கை

தொடர்ந்து பேசிய பெண் விவசாயிகள், "நாங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலங்களைச் சீர்படுத்தி, அடுத்த சாகுபடிக்குத் தயாராவதற்கு உதவியும், முதலீட்டையும் இழந்துவிட்டதால் எங்களுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும். எங்கள் நிலைமையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் வந்து பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத்துறை அலுவலர்கள் விரைந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்று ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர்.

சம்பா கட்டளைப் பகுதியில் முற்றிலும் சேதமடைந்துள்ள 100 ஏக்கர் சம்பா பயிர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.