மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று (13.07.2026) மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் நாளுக்கு நாள் பொதுமக்களின் கோரிக்கைகளும், தீர்க்கப்பட வேண்டிய தேவைகளும் அதிகரித்து வருவதை உணர்த்தும் விதமாக, இன்றைய ஒரே நாளில் மட்டும் 480 மனுக்கள்குவிந்தன. விண்ணப்பங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்ததால், மாவட்ட ஆட்சியரக வளாகம் பொதுமக்களின் வருகையால் அதிகாலை முதலே பரபரப்புடன் காணப்பட்டது.

Continues below advertisement

உரிமைத்தொகை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக அலைமோதிய மக்கள்

பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து சமர்ப்பித்த மனுக்களில், அரசு நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த கோரிக்கைகளே பிரதானமாக உற்றுநோக்கப்பட்டன. 

பெறப்பட்ட மனுக்களின் விபரம் வருமாறு

மகளிர் உரிமைத்தொகை (157 மனுக்கள்): கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு விடுபட்ட தொகையை உடனே வழங்கக் கோரி, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து மனுக்களை அளித்தனர்.

Continues below advertisement

அடிப்படை உள்கட்டமைப்பு (69 மனுக்கள்): குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சாலைகள், தெருவிளக்கு வசதி மற்றும் மழைக்கால வடிகால் கோரி கிராமப்புற மக்கள் அதிகளவில் மனுக்களை சமர்ப்பித்தனர்.

புகார்கள் மற்றும் இதர கோரிக்கைகள்: சமூகப் பிரச்சினைகள் மற்றும் அண்டை வீட்டார் அத்துமீறல்கள் தொடர்பாக 57 மனுக்கள் வரப்பெற்றன.

ஆக்கிரமிப்பு அகற்றுதல் (46 மனுக்கள்): நீர்நிலைகள் மற்றும் பொதுப் பாதைகளை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் முறையிட்டனர்.

வீட்டுமனை & பட்டா (42 மனுக்கள்): ஏழை எளிய மக்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (41 மனுக்கள்): முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை வேண்டி ஆதரவற்ற முதியவர்கள் மனு அளித்தனர்.

நிலப் பிரச்சினைகள் (26 மனுக்கள்): நில அபகரிப்பு மற்றும் குடும்பப் பாகப்பிரிவினை தொடர்பான புகார்கள் அளிக்கப்படன.

மாற்றுத்திறனாளிகள் நலன் & வேலைவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து 21 மனுக்களும், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு வேண்டி பட்டதாரி இளைஞர்களால் 21 மனுக்களும் வழங்கப்பட்டன.

அதிகரிக்கும் மனுக்கள்: மாவட்ட ஆட்சியரின் கண்டிப்பான உத்தரவு

ஒரே நாளில் மனுக்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  ஒவ்வொரு மனுவையும் தனித்தனியாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினார். பின்னர், அங்கு குழுமியிருந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு  அதிரடி அறிவுறுத்தல்களை வழங்கினார்.

"மனுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களின் தேவையை காட்டுகிறது" "மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது, தரைமட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இன்னும் அதிகமாக இருப்பதை உணர்த்துகிறது. எனவே, அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் மனுக்களை அலட்சியப்படுத்தாமல், காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட தற்போதைய நிலை (Status) குறித்து மனுதாரர்களுக்கு உடனடியாக எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்," என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொடர்ந்து மனுக்கள் அதிகரித்து வருவதால், மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க தனி செயலி அல்லது தீவிர கண்காணிப்பு முறை அவசியமாகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.