உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூரண குணமடைய வேண்டி சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் 108 தேங்காய் உடைத்து பொதுமக்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர். 


பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் 


கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளாக வரைமுறை செய்ய லலிதா ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு அரசு நியமித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அவரே செயல்பட்டார்.




இரண்டாவது ஆட்சியராக பொறுபேற்ற மகாபாரதி 


இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று அதனை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு  முன்பு தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு பணிமாறுதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இருந்த லலிதா ஐஏஎஸ் மாற்றப்பட்டு, மாவட்டத்தின் 2 -வது மாவட்ட ஆட்சியராக திருவள்ளூரில் துணை ஆட்சியராக பொறுப்பு வகித்த மகாபாரதி பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று பொறுப்பேற்கும் முன்பு பொறுப்பேற்ற முதல் நாள் அன்று மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் ஆய்வு செய்தார். அடுத்த நாளே மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடாக காணப்பட்டதை உடனடியாக சரி செய்யவும், நகராட்சி இலவச கழிப்பிடத்தை தூய்மையாக பராமரிக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு புறப்பட்டுச் சென்றார். 




சிறப்பான பணி


இந்நிலையில், உத்தரவு பிறப்பித்ததுடன் அதனை மறந்து விடாமல், மறுநாள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்த அதே இடத்தில் நகராட்சி துறையினர் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுள்ளனரா என்று நேரில் சென்று மீண்டும் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டு நகராட்சி அதிகாரிகள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டிருந்ததும், நகராட்சி கழிப்பறை தூய்மை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்ததை அடுத்து இதுபோல் திறம்பட பணிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தான் சொன்ன பணிகளை செய்து முடித்துள்ளனரா என்று மீண்டும் அதே பகுதிக்கு வந்து ஆய்வு செய்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் செயல் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. மாவட்ட ஆட்சியர் மீண்டும் மறு ஆய்வு செய்வார் என தெரியாத நிலையிலும், அப்பணிகளை உடனடியாக சரிவர நிறைவேற்றி இருந்ததால் நகராட்சி அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் மாவட்ட மக்களிடம் ஆட்சியர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து. 




மக்களின் ஆட்சியர் 


மக்களின் அந்த எதிர்ப்பிக்கு சற்றும் குறைவின்றி மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு இரவு பகல் பாராமல் தனது பணியினை திறம்பட செய்தார். அதன் பலனாக மாவட்ட மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த ஆட்சியர் மகாபாரதி, மக்கள் ஆட்சியர் என அழைக்கப்பட்டார். விவசாயிகள், மீனவர்கள், என அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை இன்முகத்துடன் அனுகி அவர்களின் குறைகளை தீர்த்து வந்தார் ஆட்சியர் மகாபாரதி.




உடல்நலம் பாதிப்பு 


இந்நிலையில் கடந்த 27 -ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மதியம் முகாமிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவருக்கு இருதயத்துக்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் இருப்பதால் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆட்சியர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.




பிராத்தனையில் பொதுமக்கள் 


இரவு பகல் பாராது ஓய்வின்றி மாவட்ட வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் பாடுபடும் ஆட்சியர் நலமுடன் திரும்ப அரசு ஊழியர்களும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  இதனிடையே மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூரண குணமடைய வேண்டி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் பக்தர்கள் ஆட்சியர் மகாபாரதி பெயர் நட்சத்திரத்திற்கு சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து 108 சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டனர். இதில் சீர்காழி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கூட்டு பிராத்தனை செய்து  வழிப்பட்டனர்.